தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 8, 2022, 8:01 PM IST

ETV Bharat / state

Video: 'போலீசாரிடம் சொல்லிவிட்டு சாராய வியாபாரத்தை நிறுத்துகிறேன்' - வியாபாரியின் பகீர் பதில்!

சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனையாகும் புதுச்சேரி பாக்கெட் சாராயம். தொடர் உயிரிழப்புகளால் பாதிக்கபட்ட மக்கள் சாராய வியாபாரியை கேட்ட போது காவல் துறையிடம் சொல்விட்டு விற்பனையை நிறுத்துவதாக கூறும் வீடியோ வைரலாகி வருகிறது.

போலீசாரிடம் சொல்லிவிட்டு சாராய வியாபாரத்தை நிறுத்துகிறேன்
போலீசாரிடம் சொல்லிவிட்டு சாராய வியாபாரத்தை நிறுத்துகிறேன்

மயிலாடுதுறை சீர்காழி நகர் பகுதி மற்றும் சீர்காழியைச் சுற்றியுள்ள ஓதவந்தான்குடி, திருப்புங்கூர், மாதிரவேலூர், பனங்காட்டான்குடி உள்ளிட்ட கடலோர மீனவக் கிராமங்களில், புதுச்சேரி மாநில மதுபானங்கள் "பாண்டி ஐஸ்" என்கிற பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கால நேரமின்றி 24 மணி நேரமும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும், இந்த விஷச் சாராயத்தை ஏழை கூலித் தொழிலாளர்கள் அருந்தி வருகின்றனர்.

இதனால் சீர்காழி மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு அடுத்தடுத்து உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. இதனால் குடும்பத்தின் தலைவரை இழந்து பல குடும்பங்கள் ஆதரவின்றி சோகத்தில் தவித்து வருகின்றனர். சீர்காழி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும் கொள்ளிடம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும் தொடர்ந்து சாராய விற்பனை செய்பவர்கள் தலைமுறை தலைமுறையாக இந்த தொழிலை செய்துவரும் ஆள்களாகவே உள்ளனர்.

மதுவால் நிகழ்ந்த உயிரிழப்பு: இதுபோன்ற ஒருசிலரை காவல் துறை களை எடுத்தாலே, இப்பகுதியில் விஷச் சாராயம் விற்பனை குறைவதோடு பல குடும்பங்களில் உயிரிழப்புகளையும் தடுக்க முடியும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நிலையில் ஓதவந்தான்குடி கிராமத்தில் சாராயத்தை குடித்த ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்தபோது விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சாராய வியாபாரியைச் சுற்றி வளைத்து, சாராய விற்பனையை கைவிட வலியுறுத்தினர். அதற்கு அச்சாராய விற்பனையாளர் கலியன் என்பவர், 'நான் காவல் துறை வரும்போது அவர்களிடம் சொல்லிவிட்டு, அதன் பின்னர் நிறுத்துகிறேன்' எனக் கூறும் வீடியோவும், தொடர்ந்து வீட்டில் வைத்தே பாக்கெட் சாராயம் விற்பனை செய்யும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

சாராய வியாபாரம்

ஒரு சில காவல் துறை அலுவலர்களை பயன்படுத்திக்கொண்டு, தொடர்ந்து சாராய விற்பனையை செய்து வருகின்றனர். ஒருவரை கைதுசெய்தால் மற்றவர், அதே இடத்தில் விற்பனை செய்வதும் தொடர்கதையாகவே இருந்து வருகிறது. எனவே, விஷச் சாராய விற்பனையை அடியோடு நிறுத்துவதற்கு மாவட்ட நிர்வாகமும், அரசும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்து வருகின்றனர்.

இதையும் படிங்க:Video - மேற்கு ஆப்பிரிக்காவில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்!

ABOUT THE AUTHOR

...view details