தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"குழந்தை எப்படி சிகப்பாக பிறக்கும்?" - காதல் மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை!

குழந்தை சிகப்பாக பிறந்ததால் காதல் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மயிலாடுதுறை முதன்மை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

By

Published : Aug 10, 2023, 8:04 AM IST

mayiladuthurai
காதல் மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை

குழந்தை சிகப்பாக பிறந்ததால் காதல் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை

மயிலாடுதுறை: குத்தாலம் அருகே அசிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன் (32). இவர் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இவர் அதே தெருவைச் சேர்ந்த அகிலா என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில், கடந்த 2012ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். தற்போது இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகனும், 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

இந்த நிலையில், அகிலாவுக்கு முதல் குழந்தை பிறந்தபோது குழந்தை சிகப்பாக பிறந்ததால், அவர் மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்துள்ளார். பின்னர் 2 வருடங்களுக்குப் பிறகு அடுத்த குழந்தையும் சிகப்பாக பிறந்ததால் ஐயப்பனின் சந்தேகம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், ஐயப்பன் தினமும் குடித்துவிட்டு அகிலாவை அடித்து துன்புறுத்தியுள்ளதாகத் தெரிகிறது.

மேலும், சிகரெட் நெருப்பால் மனைவியின் உடலில் ஆங்காங்கே சுட்டு சித்ரவதையும் செய்து வந்துள்ளதாகத் தெரிகிறது. இதனால், கோபமடைந்த அகிலா தனது தாய் வீட்டுக்குச் சென்றுள்ளார். ஆனால், அகிலாவை அவரது பெற்றோர் சமாதானம் செய்து கணவர் வீட்டுக்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி காலையில் அகிலாவின் கழுத்தை கயிற்றால் இறுக்கியுள்ளார், ஐயப்பன்.

அப்போது அகிலா கத்திய சத்தம் கேட்டு, அவரது பெற்றோர் வந்து பாத்துள்ளனர். ஆனால் அதற்குள் அகிலாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு ஐயப்பன் கயிறுடன் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார் என கூறப்படுகிறது. பின்னர், வீட்டிற்குள் சென்று பார்த்த அவரது உறவினர்கள் வீட்டில் மயங்கிக் கிடந்த அகிலாவை மீட்டு மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அப்போது அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. பின்னர் இது குறித்து, அகிலாவின் தந்தை சீனிவாசன் அளித்த புகாரின் பேரில் குத்தாலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு விசாரணை மயிலாடுதுறை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், அரசு தரப்பில் 18 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது. பின்னர் இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கிற்கு, அரசு தரப்பு வழக்கறிஞர் ராம சேயோன் வாதாடி வந்த நிலையில், மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி கந்தகுமார் நேற்று தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பின்படி மனைவியின் கழுத்தை நெரித்துக் கொன்ற குற்றத்துக்காக ஐயப்பனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.1,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து குத்தாலம் போலீசார் ஐயப்பனை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மயிலாடுதுறையில் முதன்மை மாவட்ட நீதிமன்றம் உருவாக்கப்பட்ட பிறகு, ஆயுள் தண்டனை விதிக்கப்படும் முதல் வழக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பரீட்சையில் ஃபெயில் ஆன மாணவர்களை கொடூரமாக தாக்கிய ஆசிரியர்: வீடியோ வெளியானது எப்படி?

ABOUT THE AUTHOR

...view details