தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆழிப்பேரலைத் தாக்கி, 15 ஆண்டுகள் கடந்தும் மேம்படாத மீனவர்களின் வாழ்நிலை!

நாகை: பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காவு வாங்கிய சுனாமி தாக்கிச் சென்று இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்திருந்தாலும், மீனவர்கள் தொடர்ந்து நசுக்கப்பட்டு வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

By

Published : Dec 26, 2019, 1:43 PM IST

tsunami
tsunami

இந்தோனேசியா, இந்தியா, இலங்கை, தாய்லந்து போன்ற நாடுகளை கடுமையாகத் தாக்கி இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோரை காவு வாங்கிய சுனாமி ஏற்பட்டு இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைகிறது. தமிழில் 'ஆழிப்பேரலை' என அழைக்கப்படும் சுனாமியானது, 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் 30 கி.மீ., ஆழத்தில், ரிக்டர் அளவில் 9.1 என்ற அளவுக்குப் பதிவாகி, பூகம்பத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து கடலில் எழுந்த ஆழிப்பேரலைகள் இந்தோனேசியா, இந்தியா, மியான்மர், மலேஷியா, இலங்கை, தாய்லாந்து உட்பட 14 நாடுகளில் பெரும் சேதத்தை ஏற்படுத்திச் சென்றது. இது உலகின் மோசமான இயற்கைச் சீரழிவுகளில் ஆறாவது இடம் பிடித்தது. உயிர் சேதத்துடன், கோடிக்கணக்கான ரூபாய் பொருள் சேதத்தையும் ஏற்படுத்தியது.

அதற்கு முன், 'சுனாமி' என்ற வார்த்தையையோ அதன் கோர முகத்தையோ அறிந்திடாத இந்தியர்களுக்கு அது ஏற்படுத்திச் சென்ற காயத்தின் வடு எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ஆறுவதற்கு வாய்ப்பில்லை எனலாம். ஏனெனில், சில நிமிடங்கள் மட்டுமே அடித்துச் சென்ற சுனாமியாது ஏற்படுத்திய சோகத்தின் தன்மை அத்தகையது.

இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களை சுனாமி கடுமையாகத் தாக்கியது. இதனால் இந்தியாவில் சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தமிழ்நாடு கடலோர மாவட்டங்களான சென்னை, நாகை, கடலூர், கன்னியாகுமரி மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் உயிரிழந்தனர்.

குறிப்பாக, தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டம் அதிக உயிரிழப்பு ஏற்பட்டு பிணக்காடாக காட்சியளித்தது. உயிரிழப்பு இல்லாமல் சேதத்தின் மொத்த மதிப்பு ரூ.733 கோடி என அரசு அறிவித்துள்ளது. அலையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தவர்கள் 6,065 பேர், தாய் - தந்தை இருவரையும் இழந்து ஆதரவின்றி நின்ற குழந்தைகள் 243 பேர், தாய் அல்லது தந்தை இருவரில் ஒருவரை மட்டும் இழந்தவர்கள் 1,329 பேர், இறந்துபோன 6,065 பேரில் கிறிஸ்துமஸ் தினத்துக்காக வேளாங்கண்ணிக்கு வந்திருந்த வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் 536 பேர், வெளி மாநிலம் மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த 240 பேர் எனப் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கண் கலங்க வைக்கிறது.

15 Years of Tsunami - Nagai

இத்தனை பெரிய பாதிப்பில் இருந்து உலக வங்கி, மத்திய அரசு, தொண்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், மாநில அரசு என்று பல்வேறு தரப்பினரின் ஆதரவால் நாகை முழுமையாக மீண்டு வந்துவிட்டது என்று கூற முடியாது என்கின்றனர் மீனவர்கள். சுனாமி, புயல் என தொடர்ந்து இயற்கைச் சீற்றங்களுக்கு ஆளாகும் மீனவர்களை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருவதாகவும், வாழ்வு ஆதாரங்களை இழந்து தங்களால் பிழைப்பு நடத்தவே முடியவில்லை எனவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர்களில் 5,007 பேரின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம், குடியிருப்புகளை இழந்த 19,505 பேருக்கு புதிய வீடுகள், மீனவர்களின் கூட்டுறவுக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி, 10,000க்கும் மேற்பட்டவர்களுக்கு புதிய ஃபைபர் மற்றும், விசைப்படகுகள் வாங்க 5 லட்சம் ரூபாய் மானியத்தில் கடன், பாதிக்கப்பட்டோருக்கு வலைகள், கட்டுமரம், வல்லம், ஆகியவற்றுக்குத் தனித்தனியே உரிய நிவாரணம் என்று இழப்புகள் அனைத்தும் மத்திய, மாநில அரசுகளாலும், தொண்டு நிறுவனங்களாலும் வழங்கப்பட்டது.

சுனாமிக்குப் பிறகு கடலுக்குப் போகும் மீனவர்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்தாலும் சுனாமி மட்டுமில்லாமல் புயல் போன்ற பல்வேறு இயற்கைப் பேரிடர்களிலும் சிக்கித் தவித்து வரும் மீனவர்கள் தொடர்ந்து, இலங்கை அரசினால் தாக்கப்படுவதும் வாடிக்கையாகி வருகிறது.

இதனால், இயற்கையும், இலங்கையும் மீனவர்களைத் தொடர்ந்து நசுக்கி வருவதாக கவலை தெரிவிக்கின்றனர், அப்பகுதி மீனவர்கள். சுனாமியால் ஏற்பட்ட பொருட்சேதம் ஈடுசெய்யபட்டாலும், மாண்டவர்களின் நினைவுகள் தான் உறவினர்களின் நெஞ்சத்தில் நீங்கா ரணமாகவே உள்ளது என்றால் அது மிகையாகாது.

இதையும் படிங்க: சுனாமி நினைவு தினம் - உயிரிழந்தவர்களை கண்ணீருடன் நினைவுகூர்ந்த மக்கள்!

ABOUT THE AUTHOR

...view details