தமிழ்நாடு

tamil nadu

ஓஎன்ஜிசி சார்பில் அமைக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தில் கோளாறு.. மயிலாடுதுறை அருகே 2 மாதமாக தண்ணீரின்றி மக்கள் அவதி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 28, 2023, 12:21 PM IST

Drinking water problem: மயிலாடுதுறை அருகே ஓஎன்ஜிசி எண்ணெய் மற்றும் எரிவாயு சேமிப்பு நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தானியங்கி இயந்திரம் பழுதடைந்துள்ளதால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

Drinking water problem
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தானியங்கி இயந்திரம் பழுது... 2 மாதமாக தண்ணீரின்றி மக்கள் அவதி

மயிலாடுதுறை: குத்தாலம் அருகே உள்ள சேத்திரபாலபுரம் பகுதியில் ஓஎன்ஜிசி எண்ணெய் மற்றும் எரிவாயு சேமிப்பு நிறுவனம் ஒன்று உள்ளது. இம்மாவட்டத்தில் உள்ள எண்ணெய் கிணறுகளில் இருந்து எடுக்கப்படும் எரிவாயு மற்றும் எண்ணெய் இங்கு சேகரிக்கப்பட்டு, சுத்திகரிப்பு செய்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நரிமணத்திற்கு அனுப்பப்படுகிறது.

இந்த சேமிப்பு நிலையம் அமைந்துள்ள பகுதியில் ராமாமிர்தம் தெரு, குப்பையன் காலனி, சோனாந்திடல் ஆகிய தெருக்களில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும், இந்தப் பகுதிகளில் அமைந்துள்ள ஓஎன்ஜிசி சேமிப்பு நிலையத்தால் நிலத்தடி நீரில் எண்ணெய் கலந்து தண்ணீர் மாசடைந்துள்ளதாகவும், குடிப்பதற்கு தகுதியற்றதாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், இங்குள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் குடிநீர் காவி படிந்தும் வருவதால், தொடர்ச்சியாக பல்வேறு நோய்களுக்கு ஆளாவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இதையடுத்து, அப்பகுதி மக்கள் பயன் பெறும் வகையில் 5 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் தானியங்கி இயந்திரத்தை ஓஎன்ஜிசி நிறுவனம் நிறுவியது.

இதனையடுத்து அப்பகுதியில் உள்ள மக்களுக்கு ஏடிஎம் அட்டை வழங்கி, தண்ணீர் பிடித்துக் கொள்ள 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட கேன் ஒன்றையும் வழங்கி, நாள் ஒன்றுக்கு 20 லிட்டர் மட்டும் தண்ணீர் பிடித்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் அப்பகுதி மக்களின் குடிநீர் தேவை ஓரளவுக்கு பூர்த்தியாகி வந்தது. இந்நிலையில், அந்த குடிநீர் தானியங்கி இயந்திரம் கடந்த 2 மாதங்களாக பழுதடைந்துள்ளதால், அப்பகுதியில் மீண்டும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

உடனடியாக அந்த குடிநீர் தானியங்கி இயந்திரத்தை சரி செய்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை மீண்டும் வழங்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து, ஓஎன்ஜிசி நிர்வாகத்தினரிடம் கேட்டதற்கு, தலைமை அலுவலகத்திற்கு கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்குள் பழுது சரி செய்து தரப்படும் என விளக்கம் அளித்துள்ளனர்.

இதையும் படிங்க: அம்பத்தூரில் போலீசாரை தாக்கிய சம்பவம்; விடிய விடிய நடந்த அதிரடி நடவடிக்கை.. இதுவரை 28 வடமாநிலத்தவர்கள் கைது!

ABOUT THE AUTHOR

...view details