மதுரை: தமிழ்நாடு அரசியலில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் தாக்கம் என்பது, கட்சிகளின் ஆட்சியைத் தீர்மானிக்கும் அளவிற்கு மிக செல்வாக்கு மிக்கதாகும். பெரியாரை முன்னிறுத்திய அரசியல் எந்தளவிற்கு முதன்மையானதோ அதற்கு சற்றும் குறைவில்லாதது தேவர் திருமகனார் என்றழைக்கப்படுகின்ற பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் அரசியல். பெரியார் இறப்பதற்கு 10ஆண்டுகளுக்கு முன்பே தேவர் மறைந்தாலும், 60 ஆண்டுகளைக் கடந்த பின்னரும் அவரை முன்னிறுத்திய அரசியல் இன்றளவுக்கும் குறைவில்லாத செல்வாக்கைக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை.
ஒவ்வொரு ஆண்டும் தேவரின் பிறந்த மற்றும் இறந்த நாளான அக்டோபர் 30ஆம் தேதி முக்குலத்தைச்சேர்ந்த சாதியரால் தேவர் குருபூஜையாக வெகு விமரிசையோடு கொண்டாடப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பசும்பொன்னில் அவர் பிறந்தாலும் மதுரை திருநகரில்தான் அவரது இறப்பு நிகழ்ந்தது. இதனை முன்னிட்டு மதுரை, கோரிப்பாளையம் பகுதியில் நிறுவப்பட்டுள்ள பிரமாண்ட தேவரின் சிலை, பசும்பொன்னுக்கு இணையான முக்கியத்துவத்தைப் பெற்றுத்திகழ்கிறது.
பசும்பொன்னுக்குச்செல்கின்ற அரசியல் தலைவர்கள் எவராயினும், மதுரையிலுள்ள தேவரின் சிலைக்கும் மாலையணிவித்து மரியாதை செய்கின்ற மரபு தவிர்க்க இயலாத ஒரு சடங்காக மாறியுள்ளது. இந்நிலையில், கடந்த 2014ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த ஜெ.ஜெயலலிதா, தேவர் திருமகனாருக்கு, தனது கட்சியின் சார்பாக ரூ.3.5 கோடி மதிப்புள்ள 13 கிலோ எடை கொண்ட தங்கக்கவசத்தை காணிக்கையாக வழங்கினார்.
அப்போது அதிமுகவின் பொருளாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், பசும்பொன் தேவர் நினைவாலயப் பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் ஆகியோர் தங்கக் கவசப்பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டனர். இந்தக் கவசம் மதுரை அண்ணா நகரிலுள்ள பேங்க் ஆஃப் இந்தியா வங்கியிலுள்ள கருவூலத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. தேவர் குருபூஜைக்கு சில நாட்கள் முன்பாக, தங்கக் கவசப்பொறுப்பாளர்கள் வருகை தந்து மேலாளர் முன்னிலையில் கையப்பமிட்டு பெற்றுச்செல்வது நடைமுறை. அதேபோன்று விழா நிகழ்வு முடிவடைந்தவுடன் மீண்டும் அதேபோன்று ஒப்படைப்புச்செய்து வருகின்றனர்.
தற்போது அதிமுக ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி என பிளவுபட்டுள்ள சூழலில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டுள்ளார். அதனைத்தொடர்ந்து திண்டுக்கல் சீனிவாசன் அதிமுகவின் பொருளாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இரண்டு தரப்பினரும் வங்கியை அணுகி தேவரின் தங்கக்கவசத்தை ஒப்படைக்கக்கோரி கடிதம் வழங்கியுள்ளனர்.