தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 17, 2019, 12:58 PM IST

ETV Bharat / state

மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வேட்பாளரின் பிரத்யேக பேட்டி

மதுரை:திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பி.சக்திவேல் எம்.பி.ஏ அளித்துள்ள பேட்டி.

sakthivel

ஓட்டிற்கு பிற கட்சிகளிடம் காசு வாங்கினாலும் எங்கள் ஓட்டு மக்கள் நீதி மய்யத்தில் என மக்கள் கூறுவதாக தெரிவிக்கும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பி.சக்திவேல் எம்பிஏ, ஈ டிவி பாரத் செய்திகளுக்காக பிரத்யேகமாக அளித்த பேட்டியில், ”திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் மிக முக்கியமான தேர்தலாக பார்க்கப்படுகின்றது. ஏனென்றால் இப்போது ஆட்சியில் உள்ள அதிமுகவும் சரி, திமுகவும் சரி இந்த சட்டமன்ற இடைத்தேர்தலை மிக முக்கியமானதாக பார்க்கிறார்கள் ஏனென்றால் இந்தத் தேர்தலில் யார் ஜெயிக்கிறார்களோ அவர்கள் கையில்தான் ஆட்சி செல்ல உள்ளது என்ற எண்ணம் அனைவரின் மத்தியிலும் உள்ளது, அதுவே உண்மையும்கூட. ஆனால் தற்போது மக்கள் பெருவாரியாக பாராளுமன்றத் தேர்தல் மற்றும் 18 இடைத்தேர்தலிலும் மக்கள் நீதி மய்யத்திற்கே வாக்களித்துள்ளனர்.

இப்போது திருப்பரங்குன்றம் தொகுதியில், மக்கள் நீதி மய்யம் வெல்லப் போவது என்பது உறுதியாகியுள்ளது. ஏனென்றால் நாங்கள் ஒவ்வொரு முறை மக்களை சந்திக்கும் போதும் அவர்கள் கூறுவது, இரண்டு கட்சிகளும் மாறி மாறி 50 ஆண்டுகள் ஆட்சி செய்தும் தண்ணீர் பிரச்னை மற்றும் பல பிரச்னைகள் எங்களை சூழ்ந்துள்ளது, அதனால் இந்த இரண்டு கட்சியும் வேண்டாம், மூன்றாவதாக நல்ல கட்சியான, நேர்மையான கட்சியான மக்கள் நீதி மய்யம் இருப்பதை அவர்கள் புரிந்து கொண்டனர்.

அவை மட்டுமின்றி மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் வாக்குறுதி என்பது மக்களுக்குத் தேவையானவைகளை மட்டும் நமது கமல்ஹாசன் கொடுத்துள்ளார் என்பதையும் புரிந்து கொண்டனர். கிராமங்களில் உள்ள மக்கள் ஓட்டிற்காக பிற கட்சிகள் தரும் பணத்தை நாங்கள் வாங்கிக் கொண்டாலும் மக்கள் நீதி மய்யத்தில் ஓட்டு போடுவோம் என்று எங்களிடம் கூறுகின்றனர். அது தவறு என்று நாங்கள் கூறினாலும், அந்த கட்சிகள் இத்தனை ஆண்டுகள் கொள்ளையடித்த பணத்தைதான் எங்களுக்கு கொடுக்கின்றார்கள். அதனால் அவற்றை வாங்கிக் கொண்டு நாங்கள் உங்களுக்கு ஓட்டு போடுவோம் என்று கூறுகின்றனர் என தெரிவித்தார். இதனையடுத்து அவரிடம் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் பின்வருமாறு:

ம.நீ.ம வேட்பாளர் சக்திவேல் பேட்டி

கேள்வி: திருப்பரங்குன்றம் அதிமுக மற்றும் அமமுகவின் கோட்டை என்று கூறுகின்றனர் அது மட்டுமின்றி டாக்டர் சரவணன் இரண்டு முறை தேர்தலில் போட்டியிட்ட அனுபவம் உள்ளவர். அவர்களை மீறி உங்களால் திருப்பரங்குன்றத்தில் மக்கள் நீதி மய்யத்தின் கொடியை நிலை நாட்ட முடியுமா?

பதில்: அது உண்மைதான், அவர்கள் கோட்டை என்று கூறிவந்தனர். அதற்கு காரணம் என்னவென்றால் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களும் ,ஜெயலலிதா அவர்களும் இருக்கும்போது அவர்களது கோட்டையாக இருந்தது. ஆனால் இப்போது நடந்து கொண்டிருக்கும் விஷயங்களால், மாறி மாறி பேசும் அதிமுகவையும் , அமமுகவையும் மக்கள் நம்பவில்லை.

அதேபோல் டாக்டர் சரவணன் சார்ந்த திமுக கட்சி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சியிலிருந்தது. அப்போது ஒன்றும் செய்யாதவர்கள் இப்போது என்ன செய்ய போகிறார்கள் என்று மக்கள் நினைக்கின்றனர். கோட்டை என்ற வார்த்தைகள் எல்லாம் இவர்கள் பயன்படுத்த முடியாது. ஏனென்றால் சோசியல் மீடியாக்கள் மூலம் இவர்கள் செய்யும் செயல்கள் மக்களுக்கு நேரடியாக கொண்டு செல்லப்படுகின்றது.

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் மக்கள் ஒரு வரலாற்று சாதனையை நிகழ்த்த போகிறார்கள், நேர்மையான கட்சிக்கும், மக்களின் வரி பணத்தை கொள்ளையடித்த கட்சிக்கும் இடையே நடக்கும் சண்டையில் மக்கள் நேர்மையான மக்கள் நீதி மய்யத்திற்கு வாக்களிக்க உள்ளனர்.

கேள்வி:அதிகமான முதல் தலைமுறை வாக்காளர்கள் உள்ள தொகுதி திருப்பரங்குன்றம், அவர்களின் வாக்கை பெறுவதற்கு ஏதேனும் புதிய திட்டங்கள் உள்ளதா?

பதில்: நாங்கள் புதிய திட்டங்கள் எதுவும் சொல்லத் தேவையில்லை. உண்மையை கூறினாலே போதும் நாங்கள் கூறும் உண்மை ஓட்டுக்கு ஒரு ரூபாய்கூட கொடுக்க மாட்டோம், ஒரு ரூபாய்கூட உங்களின் வரிப்பணத்திலிருந்து எடுக்க மாட்டோம் என்று கூற உள்ளோம்.

பணம் கொடுக்கும் கட்சிகள் சேவை செய்வதற்காக பணத்தை வாரி இறைக்கும், பணத்தை கொள்ளையடிக்கதான் என மக்களுக்கு தெரிந்துள்ளது. அதனால் புதிய தலைமுறை வாக்காளர்கள் மக்கள் நீதி மய்யத்திற்கு கண்டிப்பாக வாக்களிப்பார்கள் என்றார்.

கேள்வி: இப்போது மக்கள் நீதி மய்யம் வெற்றி பெற்று சட்டசபை சென்றாலும் அதிகமான எம்எல்ஏக்களை கொண்டுள்ள அவர்களை மீறி மக்களுக்கு நல்ல திட்டங்களை உங்களால் கொண்டுவர முடியுமா?

பதில்: எம்.எல்.ஏ நிதியிலிருந்து இரண்டு கோடி ரூபாய் பணம் கிடைக்கும். அவற்றில் எந்த ஒரு கொள்ளையும் அடிக்காமல் மக்களுக்கு செய்தாலே வேண்டிய திட்டங்கள் அனைத்தையும் செய்து முடிக்கலாம். ஆனால் இப்போது உள்ளவர்கள் கிடைக்கும் நிதியை 40% கொள்ளையடிக்கின்றனர். நாங்கள் எந்த ஒரு கொள்ளையும் அடிக்காமல் மக்களுக்கு செய்யவேண்டியவற்றை செய்ய முடியும், மேலும் சட்டசபையிலும் மக்களுக்கு தேவையானவற்றை கூறி வாங்கி தர முடியும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து குழந்தைகளும் வருங்கால சந்ததிகளும் லஞ்ச ஊழல் இல்லாத தமிழகத்தில் வாழ போகிறார்கள், மக்கள் நீதி மய்யம் நிச்சயமாக ஆட்சிக்கு வரும், திருப்பரங்குன்றத்தில் மக்கள் நீதி மய்யம் வெல்வது உறுதி ஆகிவிட்டது.

ABOUT THE AUTHOR

...view details