மதுரை:அஸ்ரா கார்க் ஐபிஎஸ் உதவி காவல் துறை கண்காணிப்பாளராக கடந்த 2006ஆம் ஆண்டு தனது பணியைத் தொடங்கினார். பின்னர், கடந்த 2022ஆம் ஆண்டு தென் மண்டல காவல் துறைத் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், தென் மாவட்டங்களில் நிலவி வந்த ரவுடிகளின் சாம்ராஜ்யத்திற்கு அதிரடியாக முற்றுப்புள்ளி வைத்தார்.
மேலும், குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்த ஆடியோ-வீடியோ தகவல்கள் மூலம் பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய நபர்களை தென் மண்டல காவல் துறையினர் அதிரடியாக கைது செய்தனர். அதில், குறிப்பாக ரவுடி வரிச்சியூர் செல்வம் குறித்த வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் தென் மண்டலக் காவல் துறைத் தலைவராக இருந்த அஸ்ரா கர்க்கைப் பாராட்டினார்.
இதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களில் புழங்கிய போதைப்பொருட்களின் நடமாட்டத்தைத் தடுத்து கட்டுக்குள் கொண்டு வந்தார். இவரது நடவடிக்கை காரணமாக போதைப் பொருட்கள் தொடர்பான சுமார் 831 வழக்குகளில் 1,450 பேரின் வங்கிக் கணக்குகளை முடக்கி வைத்தார். போதைப் பொருட்கள் விற்பனை செய்யும் நபர்களின் சொத்துக்கள் மட்டுமல்லாது, அவர்களின் உறவினர்கள், நெருங்கிய நண்பர்களின் சொத்துக் கணக்கும் முடக்கப்படும் என்ற எச்சரிக்கை நல்ல பலனை பெற்றுத் தந்தது.
தென் மாவட்டங்களில் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைக் குற்றங்கள் பதிவாகும் காவல் நிலையங்களில் 59 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வகையில் தென் மண்டல காவல் துறை துரித நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. காவல் துறையால் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாவிட்டால், குற்றவாளிகள் ஜாமீன் பெறுவதற்கு வாய்ப்பு ஏற்படும் என்கின்ற காரணத்தால், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க காவல் துறை கூடுதல் பொறுப்புணர்வுடன் செயல்பட்டு வருகிறது.