தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 2, 2020, 1:13 PM IST

ETV Bharat / state

இடஒதுக்கீட்டு நடைமுறையில் வெளிப்படைத்தன்மை தேவை - சு. வெங்கடேசன் எம்.பி.

மதுரை: எஸ்பிஐ நியமனங்கள் உள்ளிட்ட அரசுத்துறை நிறுவனங்களில் ஓபிசி, பட்டியலின இட ஒதுக்கீடுகளில் வெளிப்படைத் தன்மை வேண்டும் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கருத்து தெரிவித்துள்ளார்.

reservation process needs   Transparency said mp  Su Venkateshan
reservation process needs Transparency said mp Su Venkateshan

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "ஸ்டேட் வங்கி கிளார்க் பணியிடங்களுக்கான தொடக்க நிலைத்தேர்வு முடிவுகளில் வெளியிடப்பட்ட கட் ஆஃப் மதிப்பெண்கள் ஓபிசி, பட்டியலின இட ஒதுக்கீடு அமலாக்கம் குறித்த சந்தேகங்களை எழுப்பியிருந்தது. அது குறித்து நிதியமைச்சர், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர்களுக்கு கடிதம் எழுதியிருந்தேன்.

அந்தக் கடிதத்தில் சில கேள்விகளை முன்வைத்தேன். பொதுப் பிரிவினருக்கான கட் ஆஃப் 62, ஓபிசி, பட்டியலினப் பிரிவினரில் எஸ்.சி பிரிவினருக்கும் அதே 62 மதிப்பெண்களே. எஸ்.டி பிரிவினருக்கு 59.5 மதிப்பெண்கள். அதை விட பொருளாதார ரீதியாகப் பின் தங்கியோர் (EWS) கட் ஆஃப் குறைவாக 57.75 என இருந்தது. இந்த கட் ஆஃப் விவரங்கள் சமுக யதார்த்தங்களோடு பொருந்துவதாக இல்லாததால் இட ஒதுக்கீடு முறையாக அமலாகிறதா என்ற கேள்வி எழுகிறது.

தேர்வர்களுக்கு அவரவர் கட் ஆஃப் விவரங்கள் அனுப்பப்படுவதால் இட ஒதுக்கீடு அமலாகிறதா என்பதற்கான சமூகத் தணிக்கைக்கான வாய்ப்பின்றி உள்ளது. அனைவரின் கட் ஆஃப் விவரங்களும் தேர்வு பெற்றோர் பட்டியலோடு பொது வெளியில் அறிவிக்கப்பட வேண்டும்.

இந்த தேர்வுகளை நடத்தும் ஐ.பி.பி.எஸ் (IBPS) அமைப்பு ஆர்.டி.ஐ உள்ளிட்ட சமூகக் கண்காணிப்பிற்கு உட்படுவதில்லை. அரசின் ஆணைகளைக் கடைப்பிடிக்க வேண்டிய எந்தவொரு அமைப்பும் எப்படி சமூகக் கண்காணிப்பிற்கு அப்பாற்பட்டதாக இருக்க முடியும்?

பொதுப் பட்டியல் என்பது இடஒதுக்கீட்டுப் பிரிவினரையும் உள்ளடக்கியதுதான். அவர்கள் பொதுப்பட்டியல் கட் ஆஃப் மதிப்பெண்களுக்கு மேலாகப் பெறும் போது பொதுப் பட்டியலில் இடம் பெறுவார்கள் என்ற நெறி கடைப்பிடிக்கப்பட்டுள்ளதா?, எவ்வாறு பொது, ஓ.பி.சி, எஸ்.சி பிரிவினருக்கு கட் ஆஃப் ஒரே அளவில் உள்ளன?

இப்பணி நியமனங்களுக்கு வரப்பெற்றுள்ள விண்ணப்பங்களின் எண்ணிக்கை, பிரிவு வாரியான தகவல்களையும் கோரி கடிதம் எழுதியிருந்தேன்.

இந்தக் கடிதத்திற்கு நவம்பர் 30ஆம் தேதிக்குள் பதிலளிக்க வலியுறுத்தி மத்திய நிதி இணை அமைச்சர் அனுராக் சிங் தாகூர் , ஸ்டேட் வங்கி தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும், அவர் எழுதிய கடிதத்தில் விதிகள் சரியாக பின்பற்றப்பட்டுள்ளனவா என்று உரிய நடவடிக்கை எடுத்துப் பதில் அளிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

நவம்பர் 30ஆம் தேதி முடிவடைந்துள்ளதால், இன்னும் சில நாட்களிலாவது உரிய பதில் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக குறிப்பிட்ட சு. வெங்கடேசன், ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவதில் வெளிப்படைத்தன்மையும், கண்காணிப்பும் அரசுத் துறை நிறுவனங்களிடம் இருக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக இவர், இதுகுறித்த தகவல்களைக்கோரி சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் தவார்சந்த் கெலாட்டிற்கு கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:’பாமகவின் நியாயமான போராட்டத்தை காவல்துறை நசுக்குகிறது’

ABOUT THE AUTHOR

...view details