தமிழ்நாடு

tamil nadu

உக்ரைனில் படித்த மாணவர்களின் எதிர்காலத்திற்கு அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.. ஆர்.பி.உதயகுமார்

By

Published : Aug 19, 2022, 2:05 PM IST

உக்ரைனில் படித்த மாணவர்களின் எதிர்காலத்திற்கு தமிழ்நாடு அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் படித்த மாணவர்களின் எதிர்காலத்திற்கு தமிழ்நாடு அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும்.. ஆர்.பி.உதயகுமார் எம்எல்ஏ
உக்ரைனில் படித்த மாணவர்களின் எதிர்காலத்திற்கு தமிழ்நாடு அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும்.. ஆர்.பி.உதயகுமார் எம்எல்ஏ

மதுரை:இதுதொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “ரஷ்யா - உக்ரேன் போரால் அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர்கள் ‘ஆபரேஷன் கங்கா’ என்ற திட்டத்தின் மூலம் மீட்கப்பட்டனர். கல்விக்கடன் மூலமாகவும், சொந்த பணத்தை செலவிட்டும் எப்படியாவது பிள்ளைகள் மருத்துவராக வருவார்கள் என்ற மகிழ்ச்சியில் இருந்த பெற்றோர்களின் கனவுகள் சிதறி விட்டன.

ஆர்.பி.உதயகுமார்

முதல் நான்கு ஆண்டு படித்த மாணவர்கள், படிப்பை இறுதி செய்யக்கூடிய நிலையில் இருந்த 5 மற்றும் 6 வது ஆண்டு மாணவர்கள்தான் கடுமையான மனஅழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். கரோனா தொற்று பாதிப்பில் இருந்து உயிர் பிழைத்ததைவிட, போர்முனையில் இருந்து தப்பித்து வந்ததையே இந்த மாணவர்கள் பெரிதாக கருதுகிறார்கள்.

ஏறத்தாழ 20,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தாயகம் திரும்பி உள்ளனர். தற்போது செப்டம்பர் முதல் நேரடி வகுப்பு செயல்பட உள்ளது. பணத்தை கட்டிவிட்டு உக்ரைன் நாட்டிற்கு புறப்பட்டு வாருங்கள் என்று கல்லூரியின் சார்பாக மாணவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.

உக்ரைன் நாட்டிற்குச் செல்ல பாராளுமன்ற நிலைக்குழுவும் பரிந்துரை செய்துள்ளது. ஆகவே தமிழ்நாடு முதலமைச்சர், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஆகியோர் இதற்கு தனிக்கவனம் செலுத்தி, மத்திய அரசிடம் அனுமதி பெற்று மாணவர்கள் படிப்பை தொடர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

எய்ம்ஸ் பணிகள்: மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எய்ம்ஸ் மருத்துவமனை இடத்தை ஆய்வு செய்ய வேண்டும். மத்திய அரசிடம் அழுத்தம் கொடுத்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிட பணிகள், எப்போது தொடங்கும் என்று தென் மாவட்ட மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

அதேபோல் மருத்துவமனையை ஆய்வு செய்யும்பொழுது தேவையான உபகரணங்களை வழங்க நிதி ஒதுக்க வேண்டும். அதிமுக ஆட்சி காலத்தில் கரோனா காலகட்டத்தில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து செவிலியர்கள் சேவையாற்றினர். அவர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

ஆகவே அவர்களுக்கு என்ன திட்டம் என்று அரசு விளக்க வேண்டும். அவர்களின் எதிர்காலம் குறித்த அரசு நடவடிக்கையை ஜனநாயக முறைப்படி அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும். திருமங்கலம் அரசு ஹோமியோபதி மருத்துவமனையில் தேவையான மருத்துவ உபகரணங்கள் இல்லை.

அம்மா மினி கிளினிக் நிலை என்ன? மேலும் பேரையூர் ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். ஆகவே திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு தேவையான மருத்துவ உபகரணங்களையும், பேரையூர் மருத்துவமனைக்கு தேவையான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களையும் நியமிக்க அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதுரை மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்பொழுது டெங்கு ஒழிப்பு குறித்த முழுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசு கூறி வருகிறது. அதுகுறித்து முழுமையான விளக்கத்தை அரசு அளிக்க முன்வர வேண்டும்.

சாமானிய மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கப்பட்ட அம்மா மினி கிளினிக்குக்கு மீண்டும் செயல் வடிவம் தர அரசு முன் வருமா என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும்” என பல்வேறு கேள்விகளுடன் பேசியுள்ளார்.

இதையும் படிங்க:கடந்த ஆட்சியில் சுடுகாட்டை மறித்து கட்டப்பட்ட அம்மா மினி கிளினிக் - மா.சுப்பிரமணியன்

ABOUT THE AUTHOR

...view details