தமிழ்நாடு

tamil nadu

ஆசை வார்த்தை கூறி ராணுவ வீரர்களிடம் பண மோசடி.. பாதிக்கப்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

Money laundering: தனியார் நிதி நிறுவனம் பல ஆயிரக்கணக்கான இந்திய ராணுவ வீரர்களிடம் முதலீட்டுப் பணமாக பல கோடி ரூபாயைப் பெற்று மோசடி செய்துள்ளதாக குற்றம் சாட்டி பாதிக்கப்பட்டோர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 22, 2023, 3:28 PM IST

Published : Sep 22, 2023, 3:28 PM IST

Money laundering
பண மோசடி

ஆசை வார்த்தை கூறி ராணுவ வீரர்களிடம் தனியார் நிறுவனம் பண மோசடி

மதுரை:ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் ஏற்றுமதி நிறுவனம் 2019ஆம் ஆண்டில் இருந்து தனி நபர்களிடம், பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாகக் கூறி பல்வேறு திட்டங்களின் அடிப்படையில் முதலீட்டாளர்களை இணைத்துள்ளது. இதில் தமிழ்நாடு மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் ஆயிரக்கணக்கானோர் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.

இந்நிலையில் குறிப்பிட்ட நிறுவனம் தங்களது பணத்தை ஏமாற்றிவிட்டதாக, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் சிலர் அவர்களின் குடும்பத்தினரும் மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் புகார் மனு அளித்தனர். இது குறித்து ராணுவத்தில் ஹவில்தாராகப் பணியாற்றும் செல்வம் கூறுகையில், “ஒரு லட்சம் முதலீடு செய்தால் பத்து மாதத்தில் 1லட்சத்து 80ஆயிரம் ரூபாயாக திரும்பக் கிடைக்கும் என கூறினார்கள். மேலும், நிறுவனம் தரவில்லையென்றால், அதன் பொறுப்பிலுள்ள நாங்கள் தருகிறோம் என்று நிர்வாகிகள் வாக்குறுதிகள் அளித்தனர். அதன் பேரில் நாங்கள் நம்பி எங்களது பணத்தை முதலீடு செய்தோம்.

முதலீடு செய்த முதல் இரண்டு மாதங்களில் பணம் சரியாக எங்களுக்கு வந்தது. அதற்குப் பிறகு அந்தத் திட்டத்தை மாற்றி 5 லட்சம் ரூபாய் முதலீடாகப் போடச் சொன்னார்கள். இந்தத் தொகைக்கு ஒரே மாதத்தில் 75 ஆயிரம் ரூபாய் கிடைக்கும், தொடர்ந்து 10 மாதங்களுக்கு கிடைக்கும் என்றனர். அதிலும் நாங்கள் முதலீடு செய்தோம். இதற்காக வங்கிகளில் தனிக்கடன், வீடு மற்றும் நகைகள் அடமானம் வைத்து பணத்தை முதலீடு செய்தோம்.

அதன் தொடர்ச்சியாக மீண்டும் 5 லட்சம் ரூபாயை முதலீடு செய்தால் 18 மாதங்களுக்குப் பிறகு 15 லட்சம் ரூபாய் கிடைக்கும் என்றார்கள். 18 மாதங்களும் முடிந்து இதுவரை ஒரு பைசா கூட எங்களுக்குக் கிடைக்கவில்லை. ஆனால், தொடர்ந்து பல்வேறு வகையில் ஏமாற்றி வருகின்றனர். அச்சமயம் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலைக் காரணமாகக் காட்டினார்கள். பணம் கிடைக்கவில்லை என்று புகார் அளித்தால் எந்த பயனும் உங்களுக்கு கிடைக்காது என்றும் அரசியல்வாதி ஒருவரைக் குறிப்பிட்டு மிரட்டுகிறார்கள். இது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்துள்ளோம்.

மதுரை, திண்டுக்கல், தேனி, திருச்சி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்பட தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் முதலீட்டாளர்கள் உள்ளனர். அதேபோன்று கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் பலர் இந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர்.

இந்நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிலுள்ள முக்கிய நபர்களே இந்த மோசடிக்கு காரணம். எங்களின் முதலீடுக்கு இவர்கள்தான் உத்தரவாதம் அளித்தார்கள். ஆனால், தற்போது எங்கே உள்ளனர் என்று தெரியவில்லை. 5 லட்சம் ரூபாய் முதலீட்டிற்கான திட்டத்தில் 8 ஆயிரம் பேரும், 18 மாத முதலீட்டில் 15 பேரும், 1 லட்சம் ரூபாய் முதலீட்டிற்கான திட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் இணைந்துள்ளனர்.

இதுபோக வேறு சில திட்டங்களிலும் நிறைய பேர் இந்த நிறுவனத்தில் முதலீட்டாளர்களாக உள்ளனர். இதில் ஒவ்வொருவரும் ஏறக்குறைய 55 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்துள்ளோம். என்னுடைய நண்பர் ஒருவர் 1 கோடியே 15 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளார். தற்போது அவரால் தனது வீட்டிற்கான மின் கட்டணத்தைக் கூட கட்ட முடியாத நிலையில் உள்ளார். எங்களது ராணுவ வீரர்கள் எவரேனும் மன உளைச்சல் காரணமாக இறக்க நேரிட்டால் குறிப்பிட்ட தனியார் நிறுவனமே அதற்கு பொறுப்பேற்க வேண்டும்.

இந்த நிறுவனத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் முத்துச் செல்வம் என்பவர் வலியுறுத்தியதன் பேரிலேயே நாங்கள் இதில் முதலீடு செய்தோம். தற்போது எங்களை அவர் குற்றம்சாட்டுகிறார். ஆகையால் மதுரை மாவட்ட ஆட்சியர் இந்த விசயத்தில் தலையிட்டு எங்களுக்கு உரிய நீதியைப் பெற்றுத் தருவதோடு, நாங்கள் இழந்த பணத்தை மீட்டுத்தர வேண்டுகிறோம்” என்றார்.

இதையும் படிங்க:Emden ship : 10 நிமிடங்கள்.. 130 குண்டுகள்.. சென்னையை கதிகலங்கச் செய்த எம்டன்.. 109 ஆண்டுகால வரலாற்றில் நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details