மதுரை புறநகர் மேற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம் டி.குன்னத்தூரில் உள்ள அம்மா கோயிலில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழக செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, ”மருத்துவத் துறையில் ஏழை எளிய மாணவர்களின் கனவை நனவாக்கும் எண்ணத்தில், 7.5 விழுக்காடு ஒதுக்கீட்டை எடப்பாடி பழனிசாமி உருவாக்கி, அதில் 435 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பிற்கு அரசாணை வழங்கி, அதற்குரிய முழு செலவையும் அரசே ஏற்றுக்கொள்ளும் என்று அறிவித்தார்.
நீட் தேர்வு
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கூட்டத் தொடரிலேயே நீட் தேர்வை ரத்து செய்ய சட்டத்தை நிறைவேற்றி ஜனாதிபதி ஒப்புதலைப் பெறுவோம் என ஸ்டாலின் உறுதியளித்து, அதற்கென ஒரு குழுவை அமைத்தார். ஆனால், சென்னை உயர் நீதிமன்றமோ இந்தக் குழு உச்ச நீதிமன்றம் அனுமதி பெறப்பட்டதா, இது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அமையாதா என்று கேள்வி எழுப்பியுள்ளது.
இன்றைக்கு நீட் விவகாரத்தில் அரசு செல்லும் பாதை சரியான பாதையா, இதற்கு விடிவு கிடைக்குமா, கிடைக்காதா என்று மாணவர்கள் எதிர்நோக்கி காத்துள்ளனர். கல்லூரியில் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களின் கல்விக்கடனை ரத்து செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், குரூப்-1 குரூப்-2 ரயில்வே மற்றும் வங்கி ஆகிய போட்டித் தேர்வுகளுக்கு மதுரை உள்பட ஆறு நகரங்களில் பயிற்சி மையம் அமைக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியை கொடுத்தனர். அதை அரசு நிறைவேற்ற வேண்டும்.