தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘இந்தி மொழியை விட தமிழில் வடமாநிலத்தவர்கள் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி?’

மதுரை: இந்தி மொழியில் தேர்ச்சி பெற இயலாத வடமாநிலத்தவர்கள் தமிழில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? என மதுரை உயர் நீதிமன்ற கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

By

Published : Oct 6, 2020, 8:36 PM IST

உயர்நீதிமன்ற மதுரை கிளை
உயர்நீதிமன்ற மதுரை கிளை

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர் நீலகிரி ஆயுத தொழிற்சாலையின் கெமிக்கல் பிராசசிங் ஒர்க்கர் (chemical processing worker) பணியிடத்திற்காக விண்ணப்பித்திருந்தார். இதற்கான தேர்வில் சரவணன் 40 மதிப்பெண்களைப் பெற்றிருந்தார். ஆனால் அவரை விட குறைவாக மதிப்பெண் பெற்ற ஆறு பேருக்கு பணி வழங்கப்பட்ட நிலையில், அவருக்கு வழங்கப்படவில்லை.

இது தொடர்பாக சரவணன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த தனி நீதிபதி காலியாக உள்ள 12 பணியிடத்தில் சரவணனுக்கு ஒரு இடத்தை வழங்க உத்தரவிட்டிருந்தார். இதனை எதிர்த்து மத்திய அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள்,

'மாநிலங்களில் பணியமர்த்தப்படும் அதிகாரிகள் அம்மாநில மக்களுடன் தகவல் தொடர்பு கொள்ளும் வகையில் அப்பகுதி மொழியை அறிந்திருக்க வேண்டும். ஆனால் அவற்றில் தேவையற்ற பல அரசியல் நகர்வுகள் உள்ளன. வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இந்தி மொழியில் தேர்ச்சி பெற இயலாத நிலையில், தமிழ் மொழியில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று பணிகளில் அமர்வது எப்படி? என தெரியவில்லை.இது தொடர்பாக நீதிமன்றம் கேள்வி எழுப்பினால் கொள்கை முடிவு அதில் நீதிமன்றம் தலையிட இயலாது என கூறப்படுகிறது.

இந்தியாவிற்குள் வசிப்பவர்கள் மத்திய அரசு பணிகளுக்கான தேர்வு எழுதி எங்கு வேண்டுமானாலும் பணியில் சேரட்டும். ஆனால் தேர்வு முறையில் நேர்மையும், வெளிப்படைத் தன்மையும் தேவை. தமிழ்நாட்டில் மின் வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பலர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். உள்ளூர் மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இதற்கு தமிழ்நாடு அரசே பொறுப்பேற்க வேண்டும். ஆயுத தொழிற்சாலை பணியிடத்திற்கு நடைபெற்ற எழுத்துத் தேர்வின் விடைத்தாள்கள், முடிவு வெளியான மூன்று நாட்களுக்குள் அழிக்கப்பட்டதாக மனுதாரர் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்ட 178 பேரின் விடைத்தாள்கள் உள்ளனவா? இல்லையா? மனுதாரர் குறிப்பிடுவது போல் அவை அழிக்கப்பட்டு இருந்தால், அதற்கான அவசியமும் தேவையும் என்ன? பணியிடத்திற்கான நியமனம் எதன் அடிப்படையில் நடைபெற்றது? என்பது குறித்து ஊட்டி ஆயுத தொழிற்சாலையின் பொது மேலாளர் பதிலளிக்க வேண்டும்' என உத்தரவிட்டனர். இதையடுத்து வழக்கின் விசாரணை வரும் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details