தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 13, 2023, 1:50 PM IST

ETV Bharat / state

ஆண்டின் கடைசி முகூர்த்த நாள்.. ரூ.3 ஆயிரத்தை நெருங்கிய மதுரை மல்லிகை!

Jasmine Price in Madurai: கடைசி முகூர்த்த நாளை முன்னிட்டு, மதுரை மல்லிகையின் விலை கிலோ ரூ.3 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது.

மதுரை மல்லிகை
மதுரை மல்லிகை

மதுரை:மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது, மலர் வணிக வளாகம். இங்கு வாடிப்பட்டி, அலங்காநல்லூர், பாலமேடு, நெடுங்குளம், காரியாபட்டி, மேலூர், கொட்டாம்பட்டி, சத்திரப்பட்டி, ஊமச்சிகுளம், திருமங்கலம் ஆகிய பகுதிகளில் விளையும் பூக்கள், மதுரை மலர் வணிக வளாகத்திற்குக் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

மேலும் மதுரை மாவட்டம் மட்டுமன்றி, அண்டை மாவட்டங்களான விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை ஒட்டிய பகுதிகளிலிருந்தும் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. சராசரியாக நாள் ஒன்றுக்கு 50 டன்னுக்கும் மேலாக பூக்கள் மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்யப்படுகின்றன.

குறிப்பாக, மதுரையைச் சுற்றி பல்வேறு பகுதிகளில் விளையும் மல்லிகைக்கு தனிச்சிறப்பு உண்டு என்பதால், 2013ஆம் ஆண்டு மத்திய அரசு புவிசார் குறியீடு அந்தஸ்து வழங்கியுள்ளது. இதன் காரணமாக வெளி மாவட்டங்கள், மாநிலங்கள் மட்டுமன்றி துபாய், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கும் மதுரை மல்லிகை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஆண்டின் கடைசி முகூர்த்த நாளை முன்னிட்டு பூக்களின் விலை அதிகரித்து காணப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக வைகுண்ட ஏகாதசி, கிறிஸ்துமஸ் விழாவினை முன்னிட்டு, மதுரை மல்லிகை கிலோ ரூ.3 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. மதுரை மலர் வணிக வளாகத்தில் இன்று விற்பனையாகும் பிற பூக்களான முல்லை ரூ.1,000, பிச்சி ரூ.700, சம்பங்கி ரூ.200, அரளி ரூ.300, செவ்வந்தி ரூ.150, செண்டு மல்லி ரூ.120, பட்டன்ரோஸ் ரூ.150 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மதுரை மல்லியின் விலை குறித்து மாட்டுத்தாவணி மொத்த பூ வியாபாரிகள் சங்கத் தலைவர் ராமச்சந்திரன் கூறுகையில், “இந்த ஆண்டின் கடைசி முகூர்த்த நாள் டிசம்பர் 14ஆம் தேதி என்பதால், மல்லிகை விலை உயர்ந்து காணப்படுகிறது. மேலும் வைகுண்ட ஏகாதசி மற்றும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் அடுத்தடுத்து வருகின்ற காரணத்தால், இதே விலை நிலவரம் நீடிக்க வாய்ப்புள்ளது” என்றார்.

இதையும் படிங்க:பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம்.. வரதட்சணை கேட்டு கழுத்தை நெரித்துக் கொன்ற கணவன் - ஈரோட்டில் நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details