தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 2, 2023, 1:51 PM IST

ETV Bharat / state

அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட கலைமாமணி விருதில் முறைகேடா? - அரசுக்கு நீதிமன்றம் ஆணை!

அதிமுக ஆட்சியில் 2019 - 2020ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது வழங்கப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதா என்பது குறித்து, தமிழ்நாடு அரசு குழு அமைக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட கலைமாமணி விருதில் முறைகேடா? - அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!
அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட கலைமாமணி விருதில் முறைகேடா? - அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!

சென்னை:திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சமுத்திரம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவை தாக்கல் செய்தார். அதில், "தமிழ்நாடு இயல், இசை, நாடகம் மன்றம் சார்பாக கலை மற்றும் பண்பாடு துறை மூலமாக இளைஞர்களுக்கு இசை, நடனம், நாடகம், நாட்டுப்புற கலைகள், ஓவியம் மற்றும் சிற்பக்கலை கற்பிக்கப்படுகிறது.

தமிழ்நாடு இயல், இசை, நாடகம் மன்றம் சார்பாக ஆண்டுதோறும் சிறந்த கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது வழங்கி வருகிறது. கலைமாமணி விருது 5 பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது. 18 வயது கீழ் உள்ளவர்களுக்கு "கலை இளமணி" விருதும், 19 முதல் 35 வயது வரை "கலை வளர்மதி" விருதும், 36 முதல் 50 வயது வரை "கலை சுடர்மணி" விருதும், 51 முதல் 60 வயது வரை "கலை நன்மணி" விருதும், 61 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு "கலை முதுமணி" விருதும் வழங்கப்படுகிறது.

கலைமாமணி விருது வழங்குவதற்கு இதுவரை வயது வரம்போ, எந்த வித தகுதியோ, எந்த வித நெறிமுறையோ இன்று வரை வகுக்கப்படவில்லை. 2019 - 2020ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது 20.02.2021ஆம் தேதி அன்று நடத்தப்பட்டது. இதில் தகுதி இல்லாத நபர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டுள்ளது.

மேலும் கலைமாமணி விருது வழங்கும் விழாவில் வழங்கிய சான்றிதழில் உறுப்பினர், செயலாளர் மற்றும் தலைவர் ஆகியோரின் கையொப்பம் இல்லாமல் அவசர கதியில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. தகுதி இல்லாத நபர்களுக்கு கலைமாமணி விருது வழங்கியதை திரும்ப பெற வலியுறுத்தி அரசு அலுவலர்களுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

எனவே, 2019 - 2020ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது 2021இல் வழங்கப்பட்டது. இதில் தகுதி இல்லாதவர்களுக்கு வழங்கிய கலைமாமணி விருதுகளை திரும்பப் பெற உத்தரவிட வேண்டும்" என தெரிவித்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “2021ஆம் ஆண்டு கலைமாமணி விருது முந்தைய அரசால் வழங்கப்பட்டது. இதில் ஏதேனும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதா என்பது குறித்து விசாரணை செய்ய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. கமிட்டியின் அறிக்கையைப் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலமுருக பாண்டி, “கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. குறிப்பாக அவசர கதியில் இந்த விழா நடத்தப்பட்டுள்ளது. விழாவில் வழங்கப்பட்ட சான்றிதழில் முறையான கையெழுத்துகூட இல்லை. எனவே இதனை ரத்து செய்ய வேண்டும்” என வாதிட்டார்.

இந்த வழக்கில் இன்று (ஜன.2) தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், “2019 - 2020ஆம் ஆண்டு வழங்கபட்ட கலைமாமணி விருது வழங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதா? தேவைப்படும் பட்சத்தில், புதிய தேர்வு குழு அமைத்து விசாரனை நடத்த வேண்டும் என அரசுக்கு உத்தரவிடப்படுகிறது.

இந்த தேர்வு குழு ஏற்கனவே வழங்கப்பட்ட 2019 -2020 விருது பெற்றவர்களின் தகுதி குறித்து ஆய்வு செய்ய அனைத்து தரப்பினருக்கும் உரிய வாய்ப்பளித்து பரிசீலனை செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க:க.அன்பழகன் சிலை அமைக்க தடை கோரிய வழக்கு வாபஸ்!

ABOUT THE AUTHOR

...view details