தமிழ்நாடு

tamil nadu

மாமன்னன் படத்துக்கு தடை விதிக்க கோரிய வழக்கு: அவசர வழக்காக விசாரணை செய்ய நீதிபதிகள் மறுப்பு

By

Published : Jun 28, 2023, 12:45 PM IST

Updated : Jun 28, 2023, 6:31 PM IST

மாமன்னன் திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு செய்யப்பட்டது. பேச்சு உரிமை, கருத்து உரிமை அனைவருக்கும் உள்ளது என கருத்து குறி அவசர வழக்காக விசாரணை செய்ய நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர்.

Etv Bharat
Etv Bharat

மதுரை: திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த மணிகண்டன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், "இயக்குநர் மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள், கர்ணன், தற்போது மாமன்னன் போன்ற குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்த படங்களை எடுத்து வருகிறார். கடைசியாக இவர் எடுத்த கர்ணன் படத்தில் கொடிக்குளம் கிராமத்தில் நடைபெற்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இருந்தது.

இந்த நிலையில், இரு வேறு சமூக மக்களும் கர்ணன் படத்தில் வந்த சம்பவங்களை மறந்து அமைதியான சூழலில் உள்ளனர். மேலும் தற்போது உள்ள சமூகத்திற்கு இது போன்ற சம்பவங்கள் நினைவில் இல்லை. ஆனால், அதனை நினைவு கூறும் விதமாக கர்ணன் படம் இருந்தது.

தற்போது இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கி வெளியாக உள்ள படம், மாமன்னன். இப்படம் நாளை (ஜூன் 29) திரைக்கு வரவுள்ளது. இதனுடைய பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் ஆகியவை இரு வேறு சமூகத்திற்கு இடையே உள்ள பிரச்னையைக் காட்டும் விதமாகவே அமைந்துள்ளது.

குறிப்பாக தென்காசி மாவட்டத்தில் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட காத்தப்ப புலித்தேவன் என்பவரை மாமன்னன் என அழைப்பார்கள். அவரை தவறாக சித்தரிக்கும் வண்ணம் இப்படம் அமைந்துள்ளது போல் தெரிகிறது. மேலும், இப்படத்தில் நடித்துள்ள கதாநாயகன் தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினராகவும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராகவும் உள்ளார். உதயநிதி ஸ்டாலின் இப்படத்தில் நடித்துள்ளது இந்திய அரசியலமைப்புச் சட்டம் 173 (ஏ)-க்கு எதிராக உள்ளது.

இப்படம் வெளிவந்தால், இரு சமூகத்திற்கு இடையே பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. இப்படத்தை தடை விதிக்கக் கோரி பல்வேறு அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, மாமன்னன் படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கவும், இப்படத்தை திரையிலோ அல்லது ஓடிடி போன்ற எந்த வேறு தளத்திலோ ஒளிபரப்பவும் தடைவிதித்து உத்தரவிட வேண்டும்" என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் விக்டோரியா கௌரி அமர்வு முன்பு இன்று (ஜூன் 28) முறையீடு செய்யப்பட்டது. அப்போது நீதிபதிகள், மாமன்னன் திரைப்படத்திற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கை அவசர வழக்காக விசாரணை செய்ய தேவையில்லை என தெரிவித்தனர். அதற்கு மனுதாரர் தரப்பில், இரு சமூகத்தினர் இடையே பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நீதிபதிகள், திரைப்பட தணிக்கைத் துறை அனுமதி வழங்கியதில் நீதிமன்றம் தலையிட முடியாது. சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் காவல் துறையினர் பார்த்துக் கொள்வார்கள். மேலும், திரைப்படத்தை மக்கள் பார்த்ததும் அதனை இரண்டு நாட்களில் மறந்து விடுவார்கள். இதுமட்டுமின்றி, பேச்சு உரிமை மற்றும் கருத்துரிமை ஆகியவை அனைவருக்கும் உள்ளது என கூறி அவசர வழக்காக விசாரணை செய்ய நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர்.

இதையும் படிங்க:வாங்கி கட்டிய பின்னர் திருந்திய லியோ படக்குழு.. 'நா ரெடி' பாட்டில் எச்சரிக்கை வாசகம் சேர்ப்பு!

Last Updated : Jun 28, 2023, 6:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details