தமிழ்நாடு

tamil nadu

ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது பெயர் மாற்றம் - கே.எஸ்.அழகிரி கண்டனம்

By

Published : Aug 6, 2021, 9:35 PM IST

ராஜிவ் காந்தி பெயரில் வழங்கப்பட்டு வந்த விருதின் பெயர் மாற்றப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கே.எஸ்.அழகிரி கண்டனம்
கே.எஸ்.அழகிரி கண்டனம்

சென்னை:தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்று உலகத்தின் மிகச் சிறந்த தலைவராக விளங்கி, கணினித் துறையில் புரட்சிக்கு வித்திட்டு, லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும், இந்தியாவின் வளர்ச்சிக்கும் அடித்தளம் அமைத்த முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி பெருமையை போற்றுகிற வகையில் 'ராஜிவ்காந்தி கேல் ரத்னா' விருது வழங்கப்பட்டு வந்தது.

ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருது

உலகமே வியக்கும் வகையில் ஆசிய விளையாட்டு போட்டியை தலைநகர் தில்லியில் 1982 இல் நடத்திய பெருமை ராஜிவ் காந்திக்கு உண்டு. 60 ஆயிரம் பேர் அமரக்கூடிய பிரம்மாண்டமான ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கை அமைத்த பெருமையும் அவருக்கு உண்டு.

அந்தக் காலக்கட்டத்தில் தான் தலைநகர் தில்லியில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியதற்காக ராஜிவ்காந்தி அனைவரது பாராட்டையும் பெற்றார். இந்தப் பின்னணியில் தான் ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருது விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு அவரது பெயரில் விருது வழங்கப்பட்டு வந்தது.

பரந்த மனப்பான்மை வேண்டும்

ராஜிவ்காந்தி பெயரில் வழங்கப்பட்டு வந்த இந்த விருதை மாற்றி வேறொருவர் பெயரில் பிரதமர் மோடி அறிவித்திருப்பது அவரது அரசியல் காழ்ப்புணர்ச்சியையும், சிறுமைத்தனத்தையும் வெளிப்படுத்துகிறது.

பெரிய பதவியில் இருப்பவர்களுக்கு பரந்த மனப்பான்மை இருக்க வேண்டும். கடந்த கால ஆட்சியாளர்களின் பெயர்களை மாற்றிக் கொண்டே போனால், இன்றைய ஆட்சியாளர்கள் வைக்கிற பெயரை வருகிற ஆட்சியாளர்கள் மாற்றுவதற்கு பிரதமர் மோடியின் நடவடிக்கை காரணமாக அமைவது மிகுந்த துரதிருஷ்டவசமாகும்.

கே.எஸ்.அழகிரி கண்டனம்

இத்தகைய ஆரோக்கியமற்ற போக்கை கைவிட்டு, வீழ்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கும் பொருளாதார நிலையிலிருந்து நாட்டை காக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க பிரதமர் மோடி முன்வர வேண்டும்.

எனவே, இந்த பெயர் மாற்ற அறிவிப்பை வன்மையாக கண்டிக்கிறேன். இந்த அறிவிப்பை பிரதமர் மோடி திரும்பப் பெற வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:மாணவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று கல்வி கற்பிக்கும் ஆசிரியர்!

ABOUT THE AUTHOR

...view details