தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மீனாட்சி அம்மன் கோயில் செயல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கு தள்ளுபடி...!

மதுரை: மீனாட்சியம்மன் கோயில் தீ விபத்து தொடர்பாக மீனாட்சி அம்மன் கோயில் செயல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கினை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

By

Published : Apr 15, 2019, 11:51 PM IST

மீனாட்சியம்மன் கோயில் தீ விபத்து

2018ஆம் வருடம் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து குறித்து மதுரை திருநகரைச் சேர்ந்த லட்சுமணன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.


அதில், '2018 பிப்ரவரி 2ஆம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மிகப்பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இந்தத் தீ விபத்தில், கோயிலில் பழமையான பகுதி மிகுந்த சேதமடைந்துள்ளது. ஆனால் 2013ஆம் ஆண்டிலேயே கோயிலில் இதுபோன்ற தீ விபத்துகள் ஏற்படாத வகையில் தடுக்க, உரிய நடவடிக்கை எடுக்க அனைத்து கோயில்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இருப்பினும் முதல் வகை தரத்தில் உள்ள மீனாட்சி அம்மன் கோயிலில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் செய்து வைக்கப்படவில்லை. இதுவே மிகப்பெரும் தீ விபத்து ஏற்படக் காரணம். அலுவலர்களின் அலட்சியமே பழமையான மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்து ஏற்பட காரணம். ஆகவே, அதற்குக் காரணமான மீனாட்சி அம்மன் கோயில் செயல் அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' எனக் கூறியிருந்தார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு மீனாட்சியம்மன் கோயிலில் தீ விபத்து ஏற்பட்டது ஒரு எதிர்பாராத விபத்து. அதற்கு தனி நபர் யாரையும் குற்றம் சொல்ல முடியாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details