தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜல்ஜீவன் திட்டத்தில் மோசடி செய்ததாக ஊராட்சிமன்றத் தலைவர் மீது வழக்கு - விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

Madras High Court Madurai Bench: ஜல் ஜீவன் திட்ட குடிநீர் இணைப்புகளுக்கு பணம் பெற்று மோசடி செய்ததாக ஊராட்சி மன்றத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரிய வழக்கில், திருச்சி மாவட்ட ஆட்சியர் நடத்திய விசாரணையின் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 19, 2024, 3:51 PM IST

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

மதுரை:திருச்சியைச் சேர்ந்த பெரியசாமி என்பவர், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், “நாவல்பட்டு ஊராட்சித் தலைவராக 2020ஆம் ஆண்டு ஜேம்ஸ் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அண்ணாநகர் பகுதி நாவல்பட்டு ஊராட்சி எல்லைக்குள் வரும் நிலையில், குடியிருப்போர் நலச்சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் மக்களிடம் பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தருவதாகக் கூறி ஜேம்ஸ் பணம் பெற்றுள்ளார்.

மேலும், ஜல் ஜீவன் திட்டம் மூலம் குடிநீர் குழாய் இணைப்புகளை வழங்குவதாகவும், ஏற்கனவே அண்ணாநகரில் பல பகுதிகளில் குடிநீர் குழாய் இணைப்புகள் உள்ள நிலையில், தனிக்குழாய் இணைப்பு எனக்கூறி, ஒரு நபரிடமிருந்து ஆயிரத்து 500 ரூபாய் முதல் 2 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எந்த வித பில் கொடுக்காமல் வசூல் செய்துள்ளார். மேலும், பஞ்சாயத்துக்கு உட்பட்ட பல பகுதிகளில் செய்த பணிகளில் தரமற்ற பொருட்களை பயன்படுத்தி முறைகேடு செய்துள்ளார்.

இது குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில், துணை ஆட்சியரை விசாரணை செய்து அறிக்கை அளிக்க திருச்சி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இந்த குற்றச்சாட்டு குறித்து ஆய்வு செய்த துணை ஆட்சியர், எந்த விதமான அறிக்கையையும் ஆட்சியருக்கு சமர்ப்பிக்கவில்லை. ஊராட்சி மன்றத் தலைவரான ஜேம்ஸ், தனது அதிகாரம் மற்றும் பண பலத்தைப் பயன்படுத்தி விசாரணைப் போக்கை மாற்றி உள்ளார்.

எனவே, ஊராட்சி நிதியை முறைகேடு செய்து மக்களிடம் பணம் வசூலித்த ஊராட்சி மன்றத் தலைவர் ஜேம்ஸ் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என குறிப்பிட்டு இருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் புகார் குறித்து ஏற்கனவே திருச்சி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை பதிவு செய்த நீதிபதிகள், ஊராட்சி மன்றத் தலைவர் மீதான புகார் குறித்த விசாரணையின் நிலை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு, வழக்கை வருகிற 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:70% இயற்கை வளங்களை அளித்து விட்டோம்: மதுரை பாலம் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற கிளை நீதிபதி கருத்து..!

ABOUT THE AUTHOR

...view details