தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 16, 2019, 9:49 AM IST

ETV Bharat / state

நீயா, நானா - பரப்புரை மேற்கொள்வது யார்? - கரூர் பேருந்து நிலையத்தை பிடிக்க அதிமுக, காங்கிரஸ் போட்டி

கரூர்: பேருந்து நிலையம் அருகே ஒரே நேரத்தில் பரப்புரை மேற்கொள்ள காங்கிரஸ், அதிமுக போட்டி போடுவதால், இறுதிக் கட்ட பரப்புரை களம் போர்க்களமாக மாற வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் விஜயபாஸ்கர்


தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இன்றுடன் தேர்தல் பரப்புரை முடியவுள்ளதால் அனைத்து கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு பரப்புரை மேற்கொண்டு வருகின்றன. இதேபோல் கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுகவினரும், காங்கிரசாரும் தீவிரமாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இறுதிக் கட்ட பரப்புரையை நிறைவு செய்ய அதிமுகவினர் கரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள ரவுண்டானாவில் நடத்த முடிவு செய்து மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்றுள்ளனர். இதையடுத்து அதே இடத்தில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியும் இன்று பரப்புரை மேற்கொள்ள அனுமதி பெற்றுள்ளார்.

அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

இதையறிந்த போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தாங்கள் தான் பரப்புரை மேற்கொள்ள முதலில் அனுமதி பெற்றுள்ளதாகக் கூறினார். அதிகாரிகள் எப்படி காங்கிரசாருக்கும் அனுமதி வழங்கினார்கள் என்றும் இதுகுறித்து உரிய விளக்கம் அளிக்க கோரியும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

மனு அளித்து விட்டு ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியில் வந்த அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "அதிமுக சார்பில் இன்று இறுதிக்கட்ட பரப்புரை மேற்கொள்ள புதிய பேருந்து நிலையம் அருகேவுள்ள ரவுண்டானாவில் அனுமதி வழங்கக் கோரி கடந்த 12ஆம் தேதி ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து அனுமதி பெற்றுள்ளோம்.

அப்படியிருக்கையில் அதிகாரிகள் எப்படி காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கும் அதே நேரத்தில் அதே இடத்தில் பரப்புரை மேற்கொள்ள அனுமதி வழங்கினர். அனுமதி வழங்கியது குறித்து விளக்கம் அளிக்க கோரி ஆட்சியரிடம் அதிமுக சார்பில் மனு அளித்துள்ளோம். மாவட்ட ஆட்சியரும் இன்று பதிலளிப்பதாக தெரிவித்துள்ளார். இருந்தாலும் நாங்கள் திட்டமிட்டப்படி இன்று பரப்புரை மேற்கொள்வோம்".


ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் இரண்டு முக்கிய அரசியல் கட்சிகள் பரப்புரை மேற்கொள்ள அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளதால், இறுதிக் கட்ட பரப்புரையில் பிரச்னைகள் எழ வாய்ப்பு உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details