தமிழ்நாடு

tamil nadu

தொடர் விடுமுறை: குமரியில் குவியும் சுற்றுலாப் பயணிகள்!

By

Published : Jan 16, 2020, 11:53 AM IST

கன்னியாகுமரி: பொங்கல் பண்டிகை, தொடர் விடுமுறையையொட்டி சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர்.

Tourists visiting Kumari
Tourists visiting Kumari

அலைமோதும் சுற்றுலாப் பயணிகள்

உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். இவர்கள் அதிகாலையில் கதிரவன் எழும் (சூரிய உதயம்) அற்புதக் காட்சியையும், மாலையில் கதிரவன் மறையும் ரம்மியமான காட்சியையும் கண்டு மகிழ்ச்சியடைகின்றனர்.

மேலும், கடல்நடுவில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை படகில் சென்று ஆர்வமுடன் பார்த்தும்வருகிறார்கள்.

சுற்றுலாத் தலங்கள்

இதற்காகப் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் சார்பில் தினமும் காலை 8 மணிமுதல் மாலை 4 மணிவரை படகு போக்குவரத்து நடைபெற்றுவருகிறது. தற்போது, பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.

இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கடலில் நீராடியும், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், தமிழன்னை பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா, கோவளத்தில் உள்ள நீர்விளையாட்டு உல்லாச பொழுதுபோக்கு பூங்கா ஆகியவற்றை பார்வையிட்டும் மகிழ்ந்தனர்.

பாதுகாப்பை பலப்படுத்துங்கள்

மேலும், விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்வதற்காகச் சுற்றுலாப் பயணிகள் படகுத் துறையில் நீண்டவரிசையில் காத்திருந்தனர். பொங்கல் பண்டிகையையொட்டி சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக படகு போக்குவரத்து நேரம் காலை 6 மணிமுதல் மாலை 5 மணிவரை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

விடுமுறை காரணமாக குமரியில் குவியும் சுற்றுலாப் பயணிகள்

தொடர் விடுமுறையினால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் தற்போது களைகட்டியுள்ளன. இதனால் சுற்றுலாத் தலங்களில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் எனச் சுற்றுலா ஆர்வலர்களும் பொதுமக்களும் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:சமூக நல்லிணக்கத்தை போற்றும் சமத்துவ பொங்கல்

ABOUT THE AUTHOR

...view details