தமிழ்நாடு முழுவதும் இன்று பொங்கல் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் உள்ள தேவி முத்தாரம்மன் கோயிலில் பொங்கல் பண்டிகையை ஒட்டி, 251 பானைகளில் பொங்கலிடும் நிகழ்ச்சி நடைபெறும்.
இங்கு தமிழர்களின் பண்பாட்டையும் கலாசாரத்தையும் சுற்றுலாப் பயணிகள் அறியும் வகையில், மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் கன்னியாகுமரியில் தங்கியிருக்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அழைத்து வந்து, அகஸ்தீஸ்வரத்தில் ஊர் பொதுமக்களுடன் பொங்கலிடும் நிகழ்ச்சியில் பங்குபெற வைப்பது வழக்கம்.
அதே போல், இந்த ஆண்டும் ஜெர்மனி, சுவீடன், டென்மார்க், ஜப்பான், ஸ்காட்லாந்து, வடமாநிலத்தைச் சேர்ந்த 55க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை மாவட்ட சுற்றுலா அதிகாரி நெல்சன் தனிவாகனத்தில் அழைத்து வந்து, பொங்கலிடும் நிகழ்ச்சியில் பங்குபெற வைத்தார். அவர்களுக்கு மேள தாளம் முழங்க மலர் மாலை அணிவிக்கப்பட்டு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.