தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 4, 2019, 11:34 AM IST

ETV Bharat / state

தத்தளிக்கும் மீனவர்கள் - மீட்புப் பணி தீவிரம்!

கன்னியாகுமரி: கடலில் தத்தளித்துவரும் தமிழ்நாடு, ஆந்திரா, கேரள மாநிலங்களைச் சேர்ந்த 20 மீனவர்களை மீட்கும் பணியில் இந்திய கடற்படை தீவிரமாக ஈடுபட்டுவருகிறது.

மீட்புப் பணி தீவிரம்

கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஷிபு என்பவருக்குச் சொந்தமான ஸ்டார் ஆப் ஷீ 1, ஸ்டார் ஆப் ஷீ 2 ஆகிய இரு விசைப்படகுகளில் கொச்சி துறைமுகத்திலிருந்து மே 2ஆம் தேதி ஆழ்கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.

இதில், குமரி மாவட்டம் சின்னதுரையைச் சேர்ந்த படகு உரிமையாளர் ஷிபு, டென்சன், ரிச்சர்டு, நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மூன்று மீனவர்கள், ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஏழு மீனவர்கள், கேரள மாநிலம் பொழியூரைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஆறு மீனவர்கள் என 20 மீனவர்கள் படகிலிருந்தனர்.

மே 18ஆம் தேதி லட்சத்தீவில் இருந்து 300 நாட்டிக்கல் மைல் தொலைவின் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, ஸ்டார் ஆப் ஷீ 1 விசைப்படகு பழுதாகி நின்றது. இதனால் பக்கத்தில் மீன்பிடித்த ஸ்டார் ஆப் ஷீ 2 விசைப்டகு மூலம் பழுதான விசைப்படகில் சென்று இன்ஜினை சரிசெய்ய மீனவர்கள் முயன்றுள்ளனர்.

இதனால் அங்குள்ள தீவில் கரைசேரும் முயற்சியில் பழுதான படகை மற்ற விசைப்படகு மூலம் மீனவர்கள் கயிறுகட்டி இழுத்துக் கொண்டு வர முயன்றனர். ஆனால், இடையில் இரண்டாவது படகும் பழுதாகி நின்று தத்தளித்தது. கடலிலிருந்து தகவல் தெரிவிக்க செல்பேசி இணைப்புகள் கிடைக்காமல் இருந்தது.

அப்போது, விசைப்படகில் பாதுகாப்பிற்காக வைத்திருந்த நாட்டுப்படகு மூலம் அங்குள்ள சித்ரா என்ற தீவிற்குள் சென்று கடலோரக் காவல்படை, குமரி மீன்வளத் துறை அலுவலர்கள் ஆகியோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே, மேற்கு கடல் பகுதியில் மீன்பிடி தடைக்காலம் என்பதால் வேறு படகுகள் எதுவும் ஆழ்கடலில் நடமாட்டம் இன்றி இருந்தது.

இது குறித்து தெற்காசிய மீனவ தோழமை பொதுச்செயலாளர் சர்ச்சில், மீனவ குடும்பத்தினர் தமிழ்நாடு, கேரள முதலமைச்சர்கள், இந்திய கடற்படை ஆகியோர்களுக்கு மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

மீட்புப் பணி தீவிரம்
இதைத்தொடர்ந்து, இந்திய கடற்படையினர் விக்ரம் என்ற கப்பலில் லட்சத்தீவு ஆழ்கடல் பகுதியில் இரு விசைப்படகில் மீனவர்கள் தவிக்கும் பகுதிக்குச் சென்றனர். இந்நிலையில், லட்சத்தீவு அல்லது அருகில் உள்ள துறைமுக பகுதிகளில் மீனவர்கள் கரைசேர்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details