தமிழ்நாடு

tamil nadu

வாயுக்கசிவால் தீ: மக்களுக்கு மூச்சுத்திணறல் - குமரியில் அச்சம்!

By

Published : May 27, 2020, 12:03 PM IST

கன்னியாகுமரி: வெள்ளமடம் அருகே உள்ள தனியார் கையுறை தயாரிப்புத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வாயுக்கசிவால் தீப்பற்றி, பொதுமக்கள் மூச்சுத் திணறலுக்கு ஆளான நிலையில், தீயணைப்புப் படையினரால் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

கையுறை தயாரிப்புத் தொழிற்சாலையில் வாயுக்கசிவால் பற்றிய தீ
கையுறை தயாரிப்புத் தொழிற்சாலையில் வாயுக்கசிவால் பற்றிய தீ

கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன்புதூர் அருகே உள்ள வெள்ளமடம் பகுதியில், தனியார் கையுறை தயாரிப்புத் தொழிற்சாலை ஒன்று இயங்கிவருகிறது. இந்தத் தொழிற்சாலையில் உள்ளூர், வட மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்துவருகின்றனர்.

நள்ளிரவில் தொழிற்சாலையின் எரிவாயு உருளைகளில் திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டு, மிகப்பெரிய அளவில் தீப்பற்றியது. தொடர்ந்து வாயுக்கசிவால் தொழிற்சாலை அருகே உள்ள வெள்ளமடம், அனந்த பத்மநாபபுரம், அதனைச் சுற்றியுள்ள ஏழு கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான கிராம மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் அச்சமடைந்த மக்கள் உடனடியாகத் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்புத் துறை வீரர்கள், பல மணி நேரம் போராடி, எரிவாயு உருளைகளில் பற்றிய தீயை அணைத்தனர். இதனால் சுற்றியுள்ள ஏழு கிராமங்களைச் சேர்ந்த ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பெரும் ஆபத்திலிருந்து காப்பாற்றப்பட்டனர்.

கரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டு விதிகளின்படி முகக்கவசம் அணிந்து, தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்காமல், அதிவிரைவாகப் பொருள்களை உற்பத்திசெய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தத் தொழிற்சாலை இயங்கிவருவதாகவும், இதற்கு உள்ளூர், வட மாநிலத் தொழிலாளர்களைப் பயன்படுத்தப்படுவதாகவும் அப்பகுதியினர் புகார் தெரிவித்துள்ளனர்.

நள்ளிரவில் கிராம மக்கள் உறங்கிக் கொண்டிருந்த நிலையில், அனைவருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிருக்குப் போராடியது குமரி மாவட்டத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாயுக்கசிவு ஏற்பட்ட கையுறை தயாரிப்புத் தொழிற்சாலை

இதனால் தொழிற்சாலையின் செயல்பாடுகளைக் கவனித்து, உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழ்நாடு அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் அப்பகுதி மக்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.

இதையும் படிங்க :ஊழியர்களுக்கு கோவிட்-19 தொற்று! தொழிற்சாலையை மூடியது நோக்கியா!

ABOUT THE AUTHOR

...view details