கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், மண்டைக்காடு, கொட்டில்பாடு, குறும்பனை சுற்றுவட்டார மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்கள் 1500-க்கும் மேற்பட்ட கட்டுமரங்கள், 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
குளச்சல் சுற்றுவட்டார கடல் பகுதிகளில் காற்றுடன் மழை: கடலுக்கு மீன்பிடிக்க செல்லாத மீனவர்கள்
கன்னியாகுமரி: குளச்சல் சுற்றுவட்டார கடல் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்வதால் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனையடுத்து வானிலை ஆய்வு மையம் கன்னியாகுமரி கடல், அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடல் பகுதியில் சூறாவளிக் காற்றுடன் மழை பெய்யும் என எச்சரித்தது.
இந்த நிலையில் குளச்சல், சுற்றுவட்டார கடல் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் குளச்சல், மண்டைக்காடு, கொட்டில்பாடு, குறும்பனை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் யாரும் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மீனவர்களின் படகுகள் அனைத்தும் பாதுகாப்பாக துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டது. மேலும் கடல் பகுதிகளிலும் காற்றுடன் மழை தொடருவதால் ஆழ்கடல் பகுதிகளில் மீன்பிடித்து வரும் மீனவர்களும் கரைக்கு திரும்பி வருகின்றனர்.