கன்னியாகுமரி மாவட்டத்தில் 2019-20ஆம் கல்வி ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளது. இதில் 25 வயதிற்கு உட்பட்டவர்கள் போட்டியில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆட்சியர் பிரசாந்த் வடநேரே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ; ' 2019-20 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான தடகளம், நீச்சல், கூடைப்பந்து, குத்துச்சண்டை, வாலிபால், கபடி, இறகுப்பந்து, ஹாக்கி மற்றும் டென்னிஸ் ஆகிய விளையாட்டுகளுக்கான போட்டிகள் நாளை, நாளை மறுநாள் (பிப்ரவரி 8, 9ஆம்) தேதிகளில் நடக்கவுள்ளது.
இந்த போட்டிகளில் 25 வயதுக்குட்பட்டவர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் மற்றும் ஆதார் அடையாள அட்டை நகலை எடுத்துவரவேண்டும். விளையாட்டில் கலந்து கொள்பவர்கள் குழுவின் பெயர்களை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
போட்டியில் பங்குபெறும் வீரர்-வீராங்கனைகள் தங்களது பதிவினை www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் பதிவு மூலம் பதிவு செய்ய வேண்டும். மேலும் மாவட்ட அளவிலான தடகள மற்றும் நீச்சல் போட்டிகளில் முதலிடம் பெறுபவர்கள், குழு போட்டிகளில் தேர்வு செய்யப்படும் அணியினர் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள அனுப்பி வைக்கப்படுவர்' இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ‘கொடைக்கானலில் போதை பார்டி‘ - 250 பேரை கொத்தாக தூக்கிய போலீஸ்