சைவ மடங்களில் மிகத் தொன்மையான மடம் காஞ்சி தொண்டை மண்டல ஆதீனம் ஞானப்பிரகாச மடம் ஆகும். இது காஞ்சிபுரம் பரமசிவன் தெருவில் உள்ளது. இம்மடத்தின் 232ஆவது பட்டம் ஆதீனமாக ஸ்ரீலஸ்ரீ ஞானப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் 2008ஆம் ஆண்டு முதல் பொறுப்பேற்று தற்போது வரை செயல்பட்டு வந்தார். இந்த மடத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், மதுரை உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன.
இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி ஞானப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் மடத்தினுள் தவறி விழுந்ததையடுத்து, தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். அவருக்கு வயது 87.
மறைந்த ஆதீனத்தின் பூத உடல் காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் ஞானபிரகாச மடத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அவரின் பூத உடல் தற்போது வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இம்மடத்தில் மறைந்த தொண்டை மண்டல ஆதீனத்தின் மடாதிபதிகள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் இன்று (டிச.03) ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஞானப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகளின் உடலும் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.