கல்லூரி மாணவர்களின் விமான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும்வகையில் இப்போட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது. மூன்று நாள்கள் நடைபெறும் இந்த விமான தொழில்நுட்பம் தொடர்பிலான போட்டியில் ஆந்திரப் பிரதேசம், கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், டெல்லி ஆகிய இடங்களிலிருந்து 167 கல்லூரிகள் பங்குபெறுகின்றன.
ஆபத்தான காலங்களில் விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்ற, பேரிடர் காலங்களில் சூழ்நிலை குறித்து கேமரா மூலம் பதிவுசெய்தல், யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் கண்டறிதல், சூரியச் சக்தியில் இயங்கும் விமானங்கள், லிப்போ பேட்டரியில் இயக்கும் சிறிய ரக விமானம் என மாணவர்களால் உருவாக்கப்பட்ட பலவகை விமானங்கள் இக்காட்சியில் இடம்பெற்றுள்ளன.
சிறிய ரக விமானம், ஆளில்லா விமானம், பயணிகள் விமானத்தில் செய்யப்பட்டுள்ள சிறிய மாற்றங்கள், அதன் பறக்கும் தன்மை, விமானத்தின் தொழில்நுட்ப சாதனங்கள், விபத்தில்லா பயணம், விமான வடிவமைப்புகள் குறித்து மாணவர்கள் தங்களது படைப்புகளில் வெளிப்படுத்தினர்.