சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. தமிழ்நாடு, கர்நாடகத்தை இணைக்கும் முக்கிய வழித்தடமான திம்பம் மலைப்பாதையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன.
பழுதாகி நின்ற பேருந்து - போக்குவரத்து பாதிப்பு!
ஈரோடு: திம்பம் மலைப்பாதையில் சுற்றுலாப் பேருந்து பழுதாகி நின்றதால் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், கோவையில் இருந்து மைசூர் வழியாக மகாராஷ்டிரா செல்லும் சுற்றுலாப் பேருந்து திம்பம் மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்தது. மிகவும் குறுகிய வளைவான ஒன்பதாவது கொண்டை ஊசி வளைவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு பேருந்து திரும்ப முடியாமல் பின்புறம் தரையைத் தட்டி நின்றது. இதனால் இரு மாநிலங்களிடையே சரக்கு, பயணிகள் வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.
சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து நின்றதால், பேருந்தில் பயணித்த பயணிகள் வேன் மூலம் பண்ணாரி வந்தனர். அங்கு வந்த நெடுஞ்சாலை காவல் துறையினர் கிரேன் மூலம் பேருந்தை சற்றுநகர்த்தி வாகன போக்குவரத்துக்கு உதவினர். இதனையடுத்து, போக்குவரத்து தொடங்கியது.