தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 13, 2022, 6:49 PM IST

ETV Bharat / state

பொங்கல்: சந்தையில் கால்நடைகள் ரூ.2.50 கோடிக்கு விற்பனை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் வாங்க விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் புஞ்சைபுளியம்பட்டி கால்நடைச் சந்தையில் இன்று 1500-க்கும் மேற்பட்ட கால்நடைகள் ரூபாய் 2.50 கோடிக்கு விற்பனையானது.

பொங்கல் பண்டிகை எதிரொலி:சந்தையில் கால்நடைகள் ரூ.2.50 கோடிக்கு விற்பனை.
பொங்கல் பண்டிகை எதிரொலி:சந்தையில் கால்நடைகள் ரூ.2.50 கோடிக்கு விற்பனை.

ஈரோடு:புஞ்சை புளியம்பட்டியில் உள்ள கால்நடை சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை கூடுகிறது. தமிழ்நாட்டில் பொள்ளாச்சிக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய சந்தையாக விளங்கும் புஞ்சைபுளியம்பட்டி கால்நடை சந்தைக்கு ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டு விவசாயிகள், வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர்.

பல்வேறு கால்நடைகள் விற்பனை

இந்நிலையில், இன்று புஞ்சைபுளியம்பட்டி கால்நடைச் சந்தைக்கு 60 எருமைகள், 500 கலப்பின மாடுகள், 350 ஜெர்சி மாடுகள், 80 வளர்ப்புக் கன்றுகள், 500-க்கும் மேற்பட்ட ஆடுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டுவந்தனர். பல்வேறு பகுதிகளிலிருந்து வியாபாரிகள், கால்நடை வளர்ப்போர் வந்திருந்தனர். ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வாங்க விவசாயிகள் சந்தையில் குவிந்தனர்.

எருமைகள் 16 ஆயிரம் முதல் 36 ஆயிரம் ரூபாய் வரையிலும், கறுப்பு வெள்ளை மாடு 22 ஆயிரம் முதல் 48 ஆயிரம் ரூபாய் வரையிலும், ஜெர்சி 23 ஆயிரம் முதல் 53 ஆயிரம் ரூபாய் வரையிலும், சிந்து 15 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரையிலும், நாட்டுமாடு 40 ஆயிரம் முதல் 74 ஆயிரம் ரூபாய் வரையிலும் வளர்ப்பு கன்றுகள் 6000 முதல், 14 ஆயிரம் ரூபாய் வரையிலும், வெள்ளாடு, செம்மறி ஆடுகள் 5000 ரூபாய் முதல் 12 ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்பனையானது.

ரூ.2 கோடிக்கு மேல் விற்பனை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டும் ஆடு, மாடுகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு விவசாயிகள் வாங்கிச் செல்வதாகவும், கடந்த வாரத்தைவிட இந்த வாரம் மாடுகளின் வரத்து அதிகரித்துள்ளதாகவும், சந்தைக்கு விற்பனைக்குக் கொண்டுவரப்பட்ட 1500-க்கும் மேற்பட்ட கால்நடைகள் ரூ.2.50 கோடிக்கு விற்பனையானது எனவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

மார்கழி மாதத்தில் விற்பனை மந்தமாக இருந்த நிலையில் நாளை தை மாதம் தொடங்க உள்ளதால் கால்நடைகள் விற்பனை அதிகரித்ததால் வியாபாரிகள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதையும் படிங்க:அரங்கனைக் காணவந்த அண்ணாமலை

ABOUT THE AUTHOR

...view details