தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 6, 2019, 1:18 PM IST

ETV Bharat / state

யானை தாக்கி இளைஞர் பலி!

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே யானை தாக்கியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

யானை தாக்கியதில் வாலிபர் பலி-மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி படுகாயம்!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள விளாமுண்டி வனச்சரகத்தில் 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இந்த யானைகள் தினமும் இரவில் வனத்தைவிட்டு வெளியேறி அருகே உள்ள கிராமங்களில் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள விளைபொருட்களை சேதப்படுத்திவருகிறது.

இந்நிலையில் நேற்று சத்தியமங்கலம் அருகேயுள்ள நால்ரோடு கிராமத்தின் சாலையோர வனப்பகுதியில் கிராம மக்கள் நடந்து சென்றுகொண்டிருந்தபோது திடீரென அங்கு வந்த யானை ஒன்று அவர்களை தாக்க ஆரம்பித்தது.

அப்போது சுமார் 55 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி ஒருவர் தாக்கப்பட்டு யானையின் தும்பிக்கையால் தூக்கி வீசப்பட்டார். இதைக்கண்ட வாகன ஓட்டிகள் அப்பெண்ணை காப்பாற்ற முயன்றனர்.

ஆனால் யானை மூதாட்டியின் அருகேயே நின்று கொண்டிருந்ததால் அதனருகில் செல்ல இயலவில்லை. பின்னர் திரும்பி வேகமாய் வந்த யானை நால்ரோடு கிராமத்தைச் சேர்ந்த குமார் (29) என்பவரை பலமாக தாக்கியது.

பின்பு தகவலறிந்து அங்கு சென்ற விளாமுண்டி வனத் துறையினர் யானையை காட்டிற்குள் விரட்டியடித்தனர். பின்பு காயமடைந்த இருவரையும் மீட்டு, சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதில் குமார் மருத்துவமனை கொண்டுசெல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இறந்த குமாரின் உறவினர்கள், நால்ரோடு கிராமத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள், யானைகள் வனத்தைவிட்டு வெளியேறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி சத்தியங்கலம்-மேட்டுப்பாளையம்-பவானிசாகர்-புஞ்சைபுளியம்பட்டி இணைப்புச்சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

யானைகள் வனத்தை விட்டு வெளியேறாமல் தடுக்க கோரி சாலைமறியலில் ஈடுபட்ட பொது மக்கள்

தகவலறிந்த பவானிசாகர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உயர் அலுவலர்களிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து 2 மணி நேரமாக நடந்த போராட்டம் கைவிடப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details