தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'புதுச்சேரி CM கப்பம் பெற்றுக்கொண்டு கள்ளச்சாராயத்திற்கு அனுமதி': மாஜி CM குற்றச்சாட்டு! - dindigul news

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கலால்துறை மற்றும் காவல்துறையிடம் கப்பம் பெற்றுக்கொண்டு கள்ளச்சாராயத்தை அனுமதித்து வருகிறார் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

Ex CM Narayanasamy accused
மாஜி முதலமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு

By

Published : May 19, 2023, 9:38 AM IST

“புதுச்சேரி முதலமைச்சர் கப்பம் பெற்றுக்கொண்டு கள்ளச்சாராயத்திற்கு அனுமதி”: மாஜி முதலமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு

திண்டுக்கல்: புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பழனி முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்தார். முன்னதாக அடிவாரத்தில் இருந்து ரோப்கார் மூலம் மலைக்கோயிலுக்குச் சென்றார். அப்போது கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு சகல மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் சாயரட்சை பூஜையில் கலந்து கொண்டு முருகப் பெருமானை வழிபட்டார். அதைத் தொடர்ந்து போகர் சந்நிதியில் அமர்ந்து தியானம் செய்தார்.

அதன்பின்னர் நாராயணசாமி செய்தியாளர்களிடத்தில் பேசும்போது, ''கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது இந்திய அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த பாஜக ஆட்சியில் விலைவாசி ஏற்றம், வேலையின்மை உள்ளிட்ட காரணங்கள் காரணமாக, மக்கள் பாஜகவை தூக்கி எறிந்து விட்டனர். ஆனால், காங்கிரஸ் கட்சி சார்பில் மக்கள் நலனுக்காக பல்வேறு வாக்குறுதிகள் கூறி பிரசாரம் செய்தோம்.

தற்போது அதனால் தான் 135 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். ஆனால், பாஜக சார்பில் பிரதமர் மோடி பல இடங்களில் பிரசாரம் செய்தார். இந்தப் பிரசாரத்தின் போது ஊழலை ஒழிப்போம் என்றார். உண்மையில் இவர்கள் ஆட்சியில்தான் பல ஊழல்கள் நடைபெற்றுள்ளன. குறிப்பாக, அதானிக்கு மோடி உதவியதன் மூலமே அவர் பல லட்சம் கோடிக்கு அதிபதி ஆகியுள்ளார். இதுகுறித்து உரிய விசாரணை வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்ததால், ராகுல்காந்தியின் பதவியை பறித்து வெளியே அனுப்பி உள்ளனர்.

மேலும் விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது வருத்தத்துக்கு உரிய சம்பவமாகும். இதுதொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரணம் அளித்துள்ளார். மேலும் சம்பவத்தைத் தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஆனால், இந்த கள்ளச்சாராயம் தமிழ்நாட்டிற்கு புதுச்சேரியில் இருந்துதான் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது மட்டுமல்ல கடந்த 1 1/2 ஆண்டுகளாக புதுச்சேரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு கள்ளச்சாராயம் கடத்தப்படுகிறது. ஆனால், இதுபற்றி புதுச்சேரி முதலமைச்சர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்களது ஆட்சிக் காலத்தில் 400 மது விற்பனை நிலையங்கள் இருந்தன. தற்போது அது 900 விற்பனை நிலையங்களாக உயர்ந்துவிட்டது.

அதாவது குடித்துவிட்டு கும்மாளம் ஆடுகின்ற களமாக புதுச்சேரி மாநிலம் மாறியுள்ளது. சுமார் 24 மணி நேரமும் மதுக்கடைகள் திறந்துள்ளதால் கலாசாரம் சீரழிந்து உள்ளது. எனவே பள்ளி, கோயில், குடியிருப்பு போன்ற பொது இடங்களுக்கு அருகே உள்ள மது விற்பனை நிலையங்களை அகற்ற வேண்டும் என தொடர்ச்சியாக போராடி வருகிறோம். புதுச்சேரியில் இருந்து கள்ளச்சாராயம் கடத்தப்படுவதால் தமிழ்நாட்டு மக்கள் உயிரிழப்பது எங்களுக்கு மிகவும் வேதனையாக உள்ளது. ஆனால், புதுச்சேரி கலால்துறை மந்திரி இதை வேடிக்கை பார்த்து கொண்டுள்ளார்.

மேலும் கலால்துறை, காவல்துறை அதிகாரிகள் மீது எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. புதுச்சேரி மாநிலத்தில் கலால்துறையில் பெரும் ஊழல் நடந்து வருகிறது. இங்கு கலால்துறை மூலம் முதலமைச்சருக்கு கப்பம் கட்டுகிறார்கள். எனவே, இந்தச் செயலுக்கு முதலமைச்சர் ரங்கசாமி பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும். மேலும் கள்ளச்சாராய வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.

தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கியது என்பது அவர்களின் குடும்ப பாதுகாப்புக்காக கொடுத்தது. தமிழிசை சவுந்தரராஜன் புதுச்சேரியில் துணைநிலை கவர்னராக செயல்படவில்லை, முதலமைச்சராக செயல்படுகிறார்.

அவர், முதலமைச்சரின் அதிகாரத்தை கையில் எடுத்து புதுச்சேரியில் தங்கி உள்ளார். தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானாவுக்கு செல்வதில்லை. காரணம் அங்குள்ள அதிகாரிகள் யாரும் அவரை மதிப்பதில்லை. ஆனால், புதுச்சேரியில் ஏமாளி முதல்-மந்திரி, தலையாட்டியாக உள்ளதால் இங்கு ஆதிக்கம் செலுத்துகிறார்'' என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டினார்.

இதையும் படிங்க: RCB vs SRH: பெங்களூரு அணி அசத்தல் வெற்றி! விராட் கோலி அதிரடி சதம்!

ABOUT THE AUTHOR

...view details