திண்டுக்கல் மாநகராட்சிக்கு உள்பட்ட அண்ணா வணிக வளாகத்தில் ஒருங்கிணைந்த பூ சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தைக்கு திண்டுக்கல் அருகே உள்ள வக்கம்பட்டி, செம்பட்டி, பஞ்சம்பட்டி, நிலக்கோட்டை ஆகிய பகுதிகளில் விளைவிக்கப்படும் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுவது வழக்கம்.
இங்கிருந்து நமது அண்டை மாநிலமான கேரளா, ஆந்திரா, திருச்சி, கோவை, சென்னை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு அதிக அளவிலான பூக்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.
இதற்கிடையே கேரளா, ஆந்திரா மாநிலங்களில் கரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக இப்பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களைக் கொள்முதல் செய்யவில்லை. குறிப்பாக கேரள மாநிலத்திற்கு திண்டுக்கல் சந்தையில் இருந்து நாள்தோறும் சுமார் 15 டன் வரையிலான பூக்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும்.
கேரளாவில் கரோனா வைரஸ் தொற்று அதிகம் இருப்பதன் காரணமாக தற்போது ஒருவார காலமாக ஒரு நாளைக்கு ஒரு டன் பூக்கள் ஏற்றுமதி செய்வதே கடினமாக உள்ளது. இதனால் அனைத்து வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டுவிட்டன. வழிபாட்டு தலங்களுக்கும் சொற்ப எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே வந்து செல்கின்றனர்.
இதன் காரணமாக கேரளாவைச் சேர்ந்த வியாபாரிகள் யாரும் திண்டுக்கல் பூ சந்தைக்கு வராததால் பூக்கள் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பூ சந்தை சங்க பொருளாளர் சகாயம் கூறுகையில், "கரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக கேரளா வியாபாரம் முற்றிலும் நின்றுவிட்டது. தமிழ்நாட்டில் வழிபாட்டுத் தலங்கள், சுபநிகழ்ச்சிகள் நடைபெறாத காரணத்தினால் பூக்களின் தேவையும் வெகுவாகக் குறைந்துவிட்டது.
இதன் காரணமாக திண்டுக்கல் பூ சந்தையில் 70 விழுக்காடு வர்த்தகம் பாதிக்கப்பட்டது. கடந்த வாரம் 500 ரூபாய் முதல் ஆயிரத்து 500 ரூபாய் வரை விற்பனையான மல்லிகை இன்று ரூ.150-க்கும், ரூ.450க்கு விற்பனையான ஜாதிப்பூ ரூ.150-க்கு விற்பனையாகிறது. இதேபோல் அனைத்து பூக்களின் விலையும் வெகுவாகக் குறைந்துவிட்டது. இதனால் பூ வியாபாரிகள், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்தார்.
கரோனா எதிரொலியால் முடங்கியது திண்டுக்கல் பூ சந்தை இதையும் படிங்க:கரோனா பாதித்த வெளிநாட்டவர் தப்ப முயற்சி: உதவிய விடுதியின் மேலாளர் கைது