தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘சிட்டுக்குருவி’ குறித்து 'நம்மாழ்வார்' சொன்ன சீன கதை!

2010 ஆம் ஆண்டிலிருந்து மார்ச் 20 ஆம் தேதியை உலக சிட்டுக்குருவிகள் தினமாக உலகெங்கும் நினைவுகூரப்படுகிறது.

By

Published : Mar 21, 2020, 2:20 PM IST

Buddy of farmers Chinese story told by agricultural scientist G. Nammalvar
‘சிட்டுக் குருவி’ விவசாயிகளின் நண்பன் - நம்மாழ்வார் சொன்ன சீன கதை!

உலக அளவில் நினைவுக்கூரப்படும் மற்ற நாள்களுக்கும் சிட்டுக்குருவிகள் நாளுக்கும் வேறுபாடு இருக்கிறது. மற்ற நாள்கள் மனிதர்களுக்கு வரலாற்றை சொல்கிறது, ஆனால் உலக சிட்டுக்குருவிகள் நாளோ பல்லுயிர் சூழலை, அந்தச் சூழலின் அங்கமான மனித இனம் உணர வேண்டுமென போதிக்கிறது. அதென்னப் பல்லுயிர் சூழல் என்ற கேள்வி எழுகிறதா?

ஓருயிர் அமீபா முதல் பாசி, புல், புழு, பூச்சி, மரம், செடி, கொடி, பறவை, விலங்கு, மனிதகுலம் என இவை யாவும் ஒருங்கே வாழும் சூழல் தான் பல்லுயிர் சூழல். இவை ஒன்றோடொன்று தொடர்புடையவை மட்டுமல்ல. ஒன்றில்லை என்றால் மற்றொன்று வாழும் நிலையை இழக்கும் என்பதே நிகழ்வுண்மை!

இதற்கு இயற்கை வாழ்வியல் ஆசான் நம்மாழ்வார் ஒரு முறை சொன்ன உண்மைச் சம்பவத்தை இங்கே நினைவுப்படுத்துவது பொறுத்தமாக இருக்கும்...

‘சிட்டுக் குருவி’ விவசாயிகளின் நண்பன் - நம்மாழ்வார் சொன்ன சீன கதை!

சீன தேசத்தில் விளைச்சல் குறைந்து வறட்சியில் வாடிய வேளாண் தொழிலாளர்கள், தமது விளைச்சல்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய காக்கை, பருந்து, காட்டுப்பன்றி உள்பட நான்கு உயிரினங்களை அழிக்க வேண்டுமென மாவோவிடம் கோரிக்கை வைக்கின்றனர். அவரும் வேளாண் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று Four pests campaign என்ற பெயரில் தமது படையை அனுப்பி 4 வகை உயிரினங்களை அழிக்க ஆணையிடுகிறார். அந்த பட்டியலில் சின்னஞ்சிறியப் பறவையானச் சிட்டுக் குருவியும் இடம் பிடிக்கிறது.

சின்னஞ்சிறியப் பறவைகள் கொலை செய்யப்படுமளவுக்கு என்ன தவறு செய்தன?. விளை நிலங்களில் தானியங்களைக் கொத்தித் தின்றது தான் அவை செய்த தவறு என தீர்ப்பளிக்கப்பட்டதோ?.

மாவோவின் உத்தரவை அடுத்து சிட்டுக்குருவிகளை அழிக்க பெரும் படை கிளம்பியது. எந்த விதமான இரக்கமும் காட்டாமல் கண்ணில்பட்ட அனைத்தும் கொன்று குவிக்கப்பட்டன. அதன் கூடுகள், கூடுகளில் குருவிகளிட்ட முட்டைகள், குருவிக் குஞ்சுகள் என அனைத்தையும் கொன்று குவித்து மனித இனத்தின் அத்தனை விதமான இழிப் புத்தியையும் காட்டியது அந்தப் படை.

சிட்டுக்குருவியை அழித்து விட்டால் போதும்; வேளாண்மை செழிக்கும், உணவு உற்பத்தி பெருகும், நாடு வளருமென பொய்யானச் செய்தியைச் சீனர்கள் பரப்பிக் கொண்டிருந்தனர். அதனால் கோடிக்கணக்கான சிட்டுக்குருவிகள் அழிந்து போயின.

வேளாண்மை செழிக்குமென நம்பிக்கையில் இருந்த சீனர்களின் தலையில் இடி விழுந்த கதையாக நாட்டில் விளைச்சல் பாதியாகக் குறைந்தது. அரசுக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.

புழுப் பூச்சிகள், வெட்டுக்கிளிகளை தின்று விவசாயிகளைக் காத்து வந்த சிட்டுக்குருவிகள் அழிந்ததால், இப்போது வெட்டுக்கிளிகள் பெருத்தன. பயிர்களைச் சகட்டுமேனிக்கு அழித்தன. விளைச்சல் மேலும் பாதித்தது. மக்கள் பசியால் வாடத் தொடங்கினர்.

வானம் பொய்த்தது - வறட்சியல் நிலங்கள் வெடித்தன - பயிர்கள் வாடின. பஞ்சம் தலைவிரித்தாடியது - மக்கள் பட்டினியால் மடிந்தனர். சிட்டுக்குருவி இனத்தை அழித்ததற்குச் சீனா கொடுத்த விலை... 3 கோடியே 60 லட்சம் மக்களின் உயிர் !

வெட்டுக்கிளிகள் , பூச்சிகள் பெருகச் சிட்டுக்குருவிகள் அழித்ததுதான் காரணம் என்பதை சீனா உணர்ந்தது. அடுத்தென்ன அந்நாடு சிட்டுக்குருவிகளை காக்க ஒரு பெரும் மக்கள் இயக்கமே கண்டது!

சின்னக்குருவி தான். ஆனால், அது அழிந்தால் மனித இனத்துக்கும் அழிவு வரும். என்பதற்கு இந்தச் சம்பவம் ஓர் உதாரணம்.

இப்போது சொல்லுங்கள் பல்லுயிர் சூழலின் மிக முக்கியக் காரணியாக விளங்கும் பறவைகளின் குறியீடாக சிட்டுக்குருவிகளின் நாள் உலக அளவில் நினைவுக் கூரப்படுவது சரி தானே?

இயற்கைக்கும் பல்லுயிர் சுற்றுச்சூழலுக்கும் கேடாக வாழும் இந்த மனித இனத்தின் நடவடிக்கைகளால் அழிவின் விளிம்பில் உள்ள சிட்டுக்குருவிகளைக் காக்க நம்மை நாமே மாற்றியமைக்க உறுதி ஏற்போம்! சிட்டுக்குருவிகளைக் பாதுகாப்போம்!

இதையும் படிங்க :‘சரியாக செய்தால் உலகிலேயே அதிக லாபத்தை தரக்கூடிய தொழில் விவசாயம்’ - நடிகர் ஆர்ஜே விக்னேஷ்காந்த்

ABOUT THE AUTHOR

...view details