தமிழ்நாடு

tamil nadu

அரசுப் பள்ளியில் பிள்ளைகளைச் சேர்க்க ஆர்வம் காட்டும் பெற்றோர்

By

Published : Jul 12, 2021, 5:18 PM IST

கடந்தாண்டைக் காட்டிலும் இந்தாண்டு அரசுப் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டிவருகின்றனர்.

Parents interested in enrolling their children in government school
Parents interested in enrolling their children in government school

தர்மபுரி: கரோனா தொற்றுப் பரவல் காரணமாக தமிழ்நாட்டில் பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. கடந்தாண்டு முதலே தனியார் பள்ளி மாணவர்கள் ஆன்லைன் வாயிலாக கல்வி பயின்றுவருகின்றனர்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சி மூலமாகப் பாடங்களை நடத்த தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்நிலையில் பள்ளிகளில் இந்தக் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை தற்போது தொடங்கியுள்ளது.

கடந்தாண்டைக் காட்டிலும் இந்தாண்டு அரசுப் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டிவருகின்றனர். தர்மபுரி நகர்ப் பகுதியில் அமைந்துள்ள அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவிகள் பலர் இந்தப் பள்ளியில் சேர்ந்துள்ளனர்.

தனியார் பள்ளிகளுக்கு நிகர்

அவ்வையார் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வாட்ஸ்அப் குழு உருவாக்கி மாணவிகளுக்குப் பாடங்களைக் கற்பித்துவருகின்றனர். மேலும் ஒவ்வொரு நாளும் கல்வித் தொலைக்காட்சி வாயிலாக இன்று என்ன பாடம் நடத்தப்பட உள்ளது என்பது குறித்த குறிப்பை மாணவர்களின் பெற்றோருக்கு வாட்ஸ்அப் மூலமாக அனுப்புகின்றனர்.

இதனை அடுத்து மாணவிகள் பாடங்களைப் படித்து எழுதி அதனைப் புகைப்படமாகப் பிடித்து ஆசிரியருக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்புகின்றனர். இதில் பிழைத்திருத்தம் செய்து மீண்டும் மாணவிகளுக்கு ஆசிரியர்கள் அனுப்புகின்றனர்.

அரசுப் பள்ளியே ஆகச்சிறந்த பள்ளி

தனியார் பள்ளிகளுக்கு நிகராகச் செயல்படும் இந்தப் பள்ளியில் படிக்கவைக்க ஏராளமான பெற்றோர் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளியிலிருந்து வெளியேறி இங்கு சேர்த்துவருகின்றனர்.

ஒருசில தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுத்துவருவதால் அத்தகைய மாணவர்களுக்குப் பிறப்புச் சான்றிதழ், ஆதார் அட்டை எண் மூலம் சேர்க்கை நடைபெறுகிறது.

அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள், வேலைவாய்ப்பில் முன்னுரிமை, மருத்துவம் படிக்க 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு போன்ற சலுகைகள் இருப்பதால் பெற்றோர் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க ஆர்வம் காட்டிவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details