தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட தோனியின் தீவிர ரசிகர்: கொலையா? தற்கொலையா? போலீசார் தீவிர விசாரணை..!

Youth suicide: கடலூர் அருகே, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் தீவிர ரசிகர் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 19, 2024, 12:03 PM IST

வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட தோனியின் தீவிர ரசிகர்
வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட தோனியின் தீவிர ரசிகர்

கடலூர்: திட்டக்குடி அடுத்த அரங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபி கிருஷ்ணன். இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் தீவிர ரசிகரான இவர், தனது வீட்டிற்கு, சி.எஸ்.கே அணியின் நிறமான மஞ்சள் நிறத்தில் பெயிண்ட் அடித்தும், வீடு முழுவதும் தோனியின் படங்களை வரைந்தும் வைத்துள்ளார். குறிப்பாக தோனியின் ரசிகர்கள் பலர் இவரது வீட்டை வந்து பார்த்துச் செல்வது வழக்கம்.

இவ்வாறு தோனியின் மீது தீவிர பற்று கொண்டிருக்கும் இவருக்கு, அன்பரசி என்கிற மனைவியும், கிஷோர் (வயது 10) மற்றும் சக்திதரன் (வயது 8) என்கிற இரு மகன்களும் உள்ளனர். மேலும், கடந்த பத்து நாட்களுக்கு முன்பு இவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில், இன்று (ஜன. 18) அதிகாலை வீட்டில் மர்மமான முறையில் கோபி கிருஷ்ணன் சடலமாக கிடந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த ராமநத்தம் போலீசார் கோபி கிருஷ்ணனின் உடலை கைப்பற்றி, திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து, இச்சம்பவம், கொலையா? தற்கொலையா? என்கிற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதையும் படிங்க:தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்ட கைக்குழந்தை.. கொலைக்கு உடந்தையாக இருந்த தாய் கைது!

இதனிடையே, நேற்று (ஜன.17) இரவு நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் கோபி கிருஷ்ணனுக்கும், அதே ஊரைச் சேர்ந்த அவருடன் கொடுக்கல் வாங்கலில் தகராறு இருந்த சில இளைஞர்களுக்கும் இடையே சண்டை நடந்ததாக கூறப்படுகிறது. அதில் கோபிகிருஷ்ணனை சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, கோபி கிருஷ்ணன் அதிகாலை அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டு உள்ளார்.

இந்நிலையில், அவரது குடும்பத்தினர் கோபி கிருஷ்ணன் மீது தாக்குதல் நடத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தோனியின் ரசிகர் என ஊரில் பிரபலமான நபர், மர்மமான முறையில் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:நெல்லிக்குப்பம் காளை விடும் நிகழ்ச்சியில் இளைஞர்கள் திடீரென மோதல்.. இளைஞருக்கு கத்திகுத்து - நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details