கடலூர்: திட்டக்குடி அடுத்த அரங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபி கிருஷ்ணன். இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் தீவிர ரசிகரான இவர், தனது வீட்டிற்கு, சி.எஸ்.கே அணியின் நிறமான மஞ்சள் நிறத்தில் பெயிண்ட் அடித்தும், வீடு முழுவதும் தோனியின் படங்களை வரைந்தும் வைத்துள்ளார். குறிப்பாக தோனியின் ரசிகர்கள் பலர் இவரது வீட்டை வந்து பார்த்துச் செல்வது வழக்கம்.
இவ்வாறு தோனியின் மீது தீவிர பற்று கொண்டிருக்கும் இவருக்கு, அன்பரசி என்கிற மனைவியும், கிஷோர் (வயது 10) மற்றும் சக்திதரன் (வயது 8) என்கிற இரு மகன்களும் உள்ளனர். மேலும், கடந்த பத்து நாட்களுக்கு முன்பு இவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில், இன்று (ஜன. 18) அதிகாலை வீட்டில் மர்மமான முறையில் கோபி கிருஷ்ணன் சடலமாக கிடந்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த ராமநத்தம் போலீசார் கோபி கிருஷ்ணனின் உடலை கைப்பற்றி, திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து, இச்சம்பவம், கொலையா? தற்கொலையா? என்கிற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.