தமிழ்நாடு

tamil nadu

பிராந்தியம் ஜாதியின் பெயரால் தமிழர்களை பிளவுபடுத்த திட்டமிடுகிறது பாஜக - திருமாவளவன்.

By

Published : Jul 11, 2021, 10:18 PM IST

மக்கள் தேசிய உணர்வுடன் ஒன்றிணைவதை பாஜக ஒருபோதும் விரும்பாது. தமிழர்களை பிராந்தியத்தின் பெயரால், ஜாதியின் பெயரால் பிரிக்க பாஜக திட்டமிடுகிறது என தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தொல். திருமாவளவன்
தொல். திருமாவளவன்

கடலூர்: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்பியுமான தொல். திருமாவளவன் இன்று காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சிதம்பரம் வந்தார். அவர் சிதம்பரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது, "மேகதாது அணை கட்ட முயலும் கர்நாடக அரசின் முயற்சியை முறியடிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. அதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நான் பாராட்டுகிறேன். மேகதாதுவில் அணை கட்டக்கூடாது. அது தமிழ்நாட்டின் எதிர்காலத்தை பாதிக்கும். இதுகுறித்து மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் தர வேண்டும்.

ஒன்றிய அரசின் வறட்டு பிடிவாதத்தால், சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமி கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். மோடி அரசின் அணுகுமுறை தான் இதற்கு காரணம். அந்த வழக்கில் கைதான அனைவரையும் விடுவிக்க வேண்டும்.

பிராந்தியத்தின் பெயரால் பிரிவினை

கொங்கு நாட்டைப் பிரிப்பது என்ற கருத்து குறித்த கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், "பாஜக ஒரு சமூகப் பிரிவினைவாத சிந்தனை கொண்ட கட்சி. மதம், ஜாதி பெயரால் பிளவை ஏற்படுத்தும் அரசியல் உத்தி இது. பாஜக பலவீனமாக உள்ள மாநிலங்களில் இதுபோன்ற உத்திகளை செய்து வருகிறது.

இப்படித்தான் ஜம்மு காஷ்மீரை மூன்றாக பிரித்தது. வட இந்திய மாநிலங்களை அரசியல் ஆதாயத்திற்காக துண்டு போட்டு வருகின்றது. வரும் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற தமிழ்நாட்டிலும் இது போன்ற முயற்சியை செய்து பார்க்க உள்ளதாக தெரிகிறது.

பலிகடா ஆக்கப்பட்ட எல்.முருகன்

கடந்த மக்களவைத் தேர்தலிலும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜக தோல்வியுற்றது. தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவராக இருந்த முருகனை நீக்கியது தவறு. அது அவருக்கு செய்த அவமதிப்பு. அவரால் தான் தமிழ்நாட்டில் 4 எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றனர்.

முருகனை பலிகடா ஆக்கிவிட்டு ஆறுதல் அளிக்கும் விதமாக அவருக்கு அதிகாரம் இல்லாத அமைச்சர் பதவி வழங்கப்பட்டு இருக்கிறது. முருகன் கையில் இருந்த அவரின் அதிகாரம் பறிக்கப்பட்டிருக்கிறது. இதை மேற்கு மாவட்ட பகுதியைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட, உழைக்கும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மொழி, இனம் தேசிய அடிப்படையில் அனைவரும் அணி திரள்வதை பாஜக ஒரு போதும் விரும்புவதில்லை எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:'தமிழ்நாட்டை யாராலும் பிரிக்க முடியாது' - கனிமொழி

ABOUT THE AUTHOR

...view details