தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூய்மைப் பணியாளர்களுக்கு மாநில அளவிலான ஆணையம் அமைக்க கோரிக்கை!

Sanitation workers: தூய்மை பணியாளர்களுக்கு மாநில அளவில் ஆணையம் அமைக்க வேண்டும் என்று தேசிய தூய்மைப் பணியாளர்கள் ஆணைய தலைவர் வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 27, 2023, 8:10 AM IST

தூய்மை பணியாளர்களுக்கு மாநில அளவிலான ஆணையம் - தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் வலியுறுத்தல்!
தூய்மை பணியாளர்களுக்கு மாநில அளவிலான ஆணையம் - தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் வலியுறுத்தல்!

தூய்மை பணியாளர்களுக்கு மாநில அளவிலான ஆணையம் - தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் வலியுறுத்தல்!

கோயம்புத்தூர்:தூய்மைப் பணியாளர்களுக்கான நல வாரியப் பணிகள் மற்றும் மறுவாழ்வு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று (அக்.26) கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் தேசிய தூய்மைப் பணியாளர்கள் ஆணைய தலைவர் வெங்கடேசன் கலந்து கொண்டு தலைமை வகித்தார்.

ஆய்வு கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த வெங்கடேசன் பேசுகையில், “இந்த ஆய்வுக் கூட்டத்தில் பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக சம்பளம் குறித்தான பிரச்னைதான் இருந்தது. ஒரு வார காலமாக கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடைபெற்று வந்தது. சம்பள விஷயத்தில் சில குழப்பங்கள் உள்ளது. State Minimum Wages-தான் கொடுக்க வேண்டும் என்று அரசு தெரிவித்து, அதுதான் நடைமுறையில் உள்ளது.

மற்றொரு அரசாணையில், தமிழ்நாட்டில் பொதுவாக அந்தந்த மாவட்ட ஆட்சியர் ஊதியத்தை நிர்ணயம் செய்யலாம் என்பதும் உள்ளது. PWD துறையினர் ஒரு ஊதியத்தை நிர்ணயிப்பார்கள். தமிழக அரசு, இந்த ஊதியங்களில் எந்த ஊதியம் குறைவாக உள்ளதோ, அதனைக் கொடுக்கலாம் என்று தெரிவித்ததால் அதிகாரிகள் குழம்பி உள்ளனர்.

இது போன்ற குழப்பங்கள் கோவையில் மட்டும் இருக்கிறது. மற்ற மாவட்டங்களில் இல்லை. இதற்கு முன்பு இருந்த மாவட்ட ஆட்சியர் 715 ரூபாய் தர வேண்டும் என்று அரசாணை வெளியிட்டிருந்ததாக கூறப்படும் நிலையில், முழுமையாக ஆய்வு செய்து தெரிவிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளதானர்.

அதேநேரம், மாநகராட்சி மேயர் தலைமையிலும் 648 ரூபாய் என்ற தீர்மானம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் போடப்பட்டுள்ளது” என்றார். ஆனால், தீர்மானம் போடப்பட்டு செப்டம்பர் மாதம் வரை அந்த தொகை தரப்படாமல் இருந்ததாக தெரிவித்த அவர், தொழிலாளர்கள் அனைவரும் ஜனவரி மாதத்தில் இருந்து அந்த ஊதியம் வழங்கப்படவில்லை என தெரிவிக்கிறார்கள் என்றார்.

பொதுவாக ஒவ்வொரு மாநிலத்திலும் Minimum Wages இருக்கும், அதேபோல் மத்திய அரசிடமும் Minimum Wages இருக்கும் நேரத்தில், எந்த ஊதியம் அதிகமாக உள்ளது, அதனை பின்பற்றும்படி மத்திய அரசு தெரிவிப்பதாக கூறினார்.

ஆனால் தமிழ்நாட்டில் இது அப்படியே மாறுபட்டு உள்ளதாகவும், எது குறைவாக உள்ளது அதனை தர வேண்டும் என்று கூறுவதாகவும் தெரிவித்த அவர், அந்த அரசாணையை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும், எந்த ஊதியம் அதிகமாக உள்ளதோ, அதனை தமிழக அரசு வழங்க வேண்டும் என ஆணையத்தின் சார்பில் கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

ஏனென்றால், இந்த வேலையைப் பொறுத்தவரை வேறு யாராலும் செய்ய முடியாது. கரோனா காலத்திலும் தூய்மைப் பணியாளர்களின் பணியை யாராலும் மறக்க முடியாது. கரோனா காலத்தில் பணியாற்றிய மருத்துவர்கள், காவல்துறையினர், அரசு அலுவலர்கள் ஆகிய மூன்று துறையினருக்கும் ஊதியம் அதிகமாக இருந்ததாகவும், ஆனால் தூய்மைப் பணியாளர்களுக்கு ஊதியம் மிகவும் குறைவாக வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

கரோனா காலத்தில் மற்ற துறைகளைக் காட்டிலும் தூய்மைப் பணியாளர்கள் பலரும் உயிரிழந்திருப்பதாக தெரிவித்தார். மேலும், இவர்களுக்கு எந்த தொகையை அரசு நிர்ணயம் செய்தாலும், என்னைப் பொறுத்தவரை அது குறைவுதான் என்றார். எனவே, தமிழக அரசு தற்பொழுது உள்ள அரசாணையை மறுபரிசீலனை செய்து, எந்த ஊதியம் அதிகமாக உள்ளதோ அதனை வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

தமிழ்நாட்டிலேயே மற்ற மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் நிர்ணயம் செய்கின்ற ஊதியம்தான் வழங்கப்படுவதாகவும், கோவை மாவட்டத்தில்தான் இதற்கு முன்பிருந்த மாவட்ட ஆட்சியர் நிர்ணயம் செய்த தொகையை யாரும் செயல்படுத்தவில்லை எனவும் தெரிவித்தார். எனவே, தமிழக அரசு கோவை மாவட்டத்திற்கு தனிக் கவனம் செலுத்தி, முன்னாள் மாவட்ட ஆட்சியர் அறிவித்த 715 ரூபாயை தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

கோவை பாலியல் தொல்லை:கோவை அரசு மருத்துவமனையில் பாலியல் தொல்லை இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், மருத்துவமனை முதல்வரிடம் விசாரணை மேற்கொண்டதாகவும், அப்போது மருத்துவமனை முதல்வர் அங்கு பணிபுரியும் பணியாளர்கள் சிலர் மீது குறை கூறியதாக தெரிவித்தார்.

மேலும், அங்கு ஒரு மேனேஜர் மேல்தான் குற்றம் சாட்டப்படுவதாகவும், எனவே அவரை நீக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் அறிவுறுத்தி இருப்பதாக கூறினார். பி.எஃப் தொகையை ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாகவும், தற்பொழுது புதிதாக வந்துள்ள கான்ட்ரக்டர் அந்த 648 ரூபாய் தொகையை தருவதாக தெரிவித்துள்ளார் என கூறினார்.

மேலும் ஆணையம் சார்பில் மூன்று முக்கியமான கோரிக்கைகள் இருப்பதாக தெரிவித்த அவர், காண்ட்ராக்ட் சிஸ்டத்தையே ஒழிக்க வேண்டும் என்றார். இந்த காண்ட்ராக்ட் சிஸ்டம் இருப்பதால்தான் தொழிலாளர்களுக்கு சரியாக சம்பளம் இருப்பதில்லை.

மாநில அளவிலான ஆணையம்: எனவே இந்த கான்ட்ராக்ட் சிஸ்டத்திற்கு பதிலாக கர்நாடகாவில் பின்பற்றப்படும் DPS (Direct Payment System) அல்லது ஆந்திராவில் பின்பற்றப்படும் Contractual Worker Corporation என்ற முறையை பின்பற்றலாம் என தெரிவித்தார். மேலும் தூய்மைப் பணியாளர்களுக்காக தேசிய அளவிலான ஆணையம் இருக்கும் பொழுது, மாநில அளவிலான ஆணையத்தை உருவாக்க வேண்டும் என தெரிவித்தார்.

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு உடை வாங்குவதற்காக 2022-2023ஆம் ஆண்டுக்காக நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், 2023 முடிகின்ற இந்நேரத்திலாவது அந்த நிதியைப் பெற்றுத் தர வேண்டும் என மாநகராட்சி ஆணையாளரிடம் அறிவுறுத்தி இருப்பதாக தெரிவித்தார்.

தூய்மைப் பணியாளர்களில் பலருக்கும் பிஎஃப், இஎஸ்ஐ நம்பர் தெரிவதில்லை என தெரிவித்த அவர், அவர்களது ஐடி கார்டிலேயே அந்த நம்பரை பதிவு செய்யும்படி தெரிவித்துள்ளதாக கூறினார்.

இதையும் படிங்க:சென்னை வந்தடைந்தார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு!

ABOUT THE AUTHOR

...view details