தமிழ்நாடு

tamil nadu

“மிக்ஜாம் புயல் பாதிப்புக்கு முக்கிய காரணம் மனிதர்கள்” - பூகம்ப ஆராய்ச்சியாளர் சரவணக்குமார்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 6, 2023, 8:41 AM IST

Michaung: சென்னையில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு முக்கிய காரணம் என்ன, பாதிப்பிலிருந்து மீட்பதற்கு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து விளக்குகிறார், கோவையைச் சார்ந்த பூகம்ப ஆராய்ச்சியாளர் சரவணக்குமார்.

பூகம்ப ஆராய்ச்சியாளர்
சரவணக்குமார்

மிக்ஜாம் புயல் பேரழிவுக்கு முக்கிய காரணம் மனிதர்கள்

கோயம்புத்தூர்:மிக்ஜாம் புயலால் ஏற்பட்டுள்ள பேரழிவுக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், கடந்த 30 ஆண்டுகளில் மனிதர்கள் செய்த தவறுகளே முக்கிய காரணமாகும் என்றும், புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு முக்கிய காரணம் குறித்து, கோவையைச் சார்ந்த பூகம்ப ஆராய்ச்சியாளர் சரவணக்குமார், ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

மிக்ஜாம் புயல்: வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தீவிரமடைந்துள்ள நிலையில், வங்கக்கடலில் உருவாகியுள்ள 'மிக்ஜாம் புயல்' காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டுக்குப் பிறகு சென்னையில் பெய்த மழை அளவில், தற்போது மிக்ஜாம் புயல் அதிக சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கைகள்:தொடர்ந்து பெய்து வரும் வரலாறு காணாத மழையின் காரணமாக, தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. மிக்ஜாம் புயல் தாக்கத்தால், சென்னையில் பல்வேறு இடங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

மேலும், ஏரி, குளங்கள் மழை நீரால் நிறைந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்துள்ளது. இதனால் தாழ்வானப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

47 ஆண்டுகளுக்குப் பிறகு பெய்த கன மழையால், பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் வடியாமல் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஏற்படும் புயலால், சென்னை பெருநகரம் பாதிக்கப்பட்டு, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், மழை நீர் தேக்கத்திற்கு முக்கிய காரணமாக இருப்பது நீர்வழிப் பாதைகளின் ஆக்கிரமிப்புகள் என்று கூறுகின்றனர்.

இது குறித்து கோவையைச் சேர்ந்த பூகம்ப ஆராய்ச்சியாளர் சரவணக்குமார், ஈடிவி பாரத் செய்திகளுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பேசியதாவது, “சென்னையில் தற்போது பெய்து வரும் மிக்ஜாம் புயல் சார்ந்த கனமழைக்கு ஆளும் கட்சி, எதிர்கட்சி என் அரசியல் ரீதியாக காரணம் கூறுவது தவறாகும். இனி வரும் காலங்கள், மிக்ஜாம் புயலை காட்டிலும் மிகப்பெரிய மழை மற்றும் புயல் வரக்கூடிட காலமாகும்.

தற்போது வந்துள்ள பெரும் மழைக்கு, எல் நினோ (El -nino) என்ற காலநிலை மாற்றம்தான் காரணம். ஆனால், மழையால் ஏற்பட்டுள்ள பேரழிவுக்கு கடந்த 30 ஆண்டுகளில் மனிதர்கள் செய்த தவறுகளே காரணமாகும். கழிவு நீர் செல்லக்கூடிய சிறிய நீரோடை, குளங்கள், ஏரிகள் என அனைத்து நீரோடைகளும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.

மழை நீர் செல்லக்கூடிய நீர் தடங்கள் ஆக்கிரமிக்கப்படுள்ள நிலையில், எந்த ஒரு சமரசமும் இல்லாமல், முகம் பார்க்காமல் இந்த ஏரி, குளங்களில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் அனைத்தும் அகற்றப்பட வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே இது போன்ற புயல் காலங்களில் ஏற்படும் பாதிப்பை கட்டுப்படுத்த முடியும்.

மிக்ஜாம் புயல் ஒரு மாதிரிதான். இனி வரும் புயல் மழை இவற்றைக் காட்டிலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே, நீர்வழிப்பாதை மீட்கப்பட வேண்டும். நீர்வழிப்பாதைகள் மீட்கப்படாமல் இருந்தால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். எனவே, தமிழக அரசு பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளையும், குடியிருப்புகளையும் அகற்றி சிறு நீர் நிலைகளையும் மீட்க வேண்டும்” என்று கூறினார்.

இதையும் படிங்க:எம்பி செந்தில்குமார் சர்ச்சை பேச்சு; முதலமைச்சர் ஸ்டாலின் கண்டித்ததாக ஆர்.எஸ்.பாரதி அறிக்கை!

ABOUT THE AUTHOR

...view details