தமிழ்நாடு

tamil nadu

சாதனை மாணவி ஸ்ரீதேவிக்கு ஸ்டாலின் வாழ்த்து!

By

Published : Jul 11, 2020, 2:15 PM IST

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகே பழங்குடியினத்தைச் சேர்ந்த மாணவி ஸ்ரீதேவி பத்தாம் வகுப்பில் A+ கிரேடு எடுத்து சாதித்ததைத்தொடர்ந்து, அவரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக அழைத்துப்பேசி, தனது வாழ்த்தினைத் தெரிவித்தார். மேலும் ஸ்ரீதேவிக்கு திமுக சார்பில் ஒரு லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டது.

dmk leader stalin wishes tribal student sridevi
dmk leader stalin wishes tribal student sridevi

பொள்ளாச்சி அருகே உள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில், பூச்சி கொட்டாம்பாறை எனும் பழங்குடியினர் குடியிருப்பு உள்ளது.

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதியில் 36 வனக்கிராமங்கள் உள்ளன. இதில் சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் உள்ளனர். இந்த வனக்கிராமங்களில் ஒன்றான பூச்சி கொட்டாம்பாறை, காடம்பாறை மின் உற்பத்தி நிலையத்திலிருந்து அடா்ந்த வனப்பகுதிக்குள் சுமார் 25 கி.மீ., தொலைவில் உள்ளது. இங்கு பழங்குடி இனத்தைச் சாா்ந்த முதுவா் இன மக்கள் வசித்து வருகின்றனா்.

இந்த வனக்கிராமத்தில் வாழும் செல்லமுத்து என்பவரது மகள் ஸ்ரீதேவி. பத்தாம் வகுப்பு படித்து வரும் இவர், கேரளா மாநிலம் சாலக்குடியில் விடுதியில் தங்கி படித்து வந்தாா். இவர் வசித்த பூச்சி கொட்டாம்பாறை யானை, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் நிறைந்து காணப்படும் வனப் பகுதியாகும். இங்கு போக்குவரத்து வசதிகளும் இல்லை.

எனவே, ஸ்ரீதேவி ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று முறை மட்டும் வந்து, தனது பெற்றோரை பாா்த்துவிட்டுச் செல்வாா். தற்போது கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தபட்டு பள்ளி, கல்லூரிகளில் விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் கேரளா மாநிலத்தில் அனைத்து பாதுகாப்பு வசதிகளுடனும் மாணவா்கள் 10ஆம் வகுப்புத் தேர்வினை எழுதிமுடித்தனா்.

முன்னதாக ஸ்ரீதேவி தமிழ்நாட்டில் இருந்து சாலக்குடி சென்று தேர்வு எழுதுவதில் பெரும் சிக்கல் நீடித்த நிலையில், மாணவியின் எதிா்காலத்தைக் கருத்தில் கொண்ட கேரள அரசு ஸ்ரீதேவி தமிழ்நாட்டிலிருந்து வந்து தோ்வு எழுதுவதற்குத் தேவையான சிறப்பு அனுமதி கடிதம் வழங்கியதோடு, ஆம்புலன்ஸையும் ஏற்பாடு செய்து, அதில் மாணவியை அழைத்துச்சென்று தோ்வு எழுதவைத்தனா். அதன் பயனாக 10ஆம் வகுப்புத் தோ்வில் ஸ்ரீதேவி A+ கிரேடு பெற்று தன் கிராமத்துக்கே சிறப்பு சோ்த்துள்ளாா்.

திமுக தலைவருடன் பேசிய ஸ்ரீதேவி

பழங்குடி இனத்தில் பெண்கள் யாரும் வெளி ஆட்களைப் பாா்க்கவோ, ஆண்களிடம் பேசுவதற்கோ முன்னோர்கள் அனுமதிப்பதில்லை. இக்கிராமத்தில் வாழும் பெரியவா்களின் எதிர்ப்பை மீறி, தனது மகளை பள்ளிக்கு அனுப்பி படிக்க வைத்த தனது தந்தை செல்லமுத்துவை பெருமைப்படுத்தும் வகையில், தற்போது அதிக மதிப்பெண்களைப் பெற்று, பழங்குடி இனத்தில் 10ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றுள்ள முதல் பெண்ணான ஸ்ரீதேவியால் அக்கிராமத்தினா் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

இந்தச் செய்தியை அறிந்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் உத்தரவின் பேரில் முன்னாள் அமைச்சரும் கழக உயர் நிலை செயல்திட்டக் குழு உறுப்பினருமான மு. பெ. சாமிநாதன், மடத்துக்குளம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெயராம் கிருஷ்ணன், திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளர் பத்மநாபன், அர்த்தனாரி பாளையம் ஊராட்சித் தலைவர் குலோத்துங்கன் ஆகியோர் நேற்று (ஜூலை 10) ஸ்ரீதேவி வீட்டிற்கு நேரில் சென்று, அவருக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.

மேலும் ஸ்ரீதேவிக்கு காணொலிக் காட்சி மூலமாக ஸ்டாலின் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இதனையடுத்து திமுக சார்பில் ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாணவி ஸ்ரீதேவி, 'திமுக தலைவர் ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் பேசியது எங்களுக்கு ஊக்கம் அளிப்பதாக இருந்தது. திமுக தலைவருக்கு நன்றி. அவர் அளித்த நிதியுதவி எங்கள் குடும்பத்திற்குப் பேருதவியாக இருக்கும். அடுத்தபடியாக அறிவியல் துறையைத் தேர்ந்தெடுத்து மருத்துவராகி, வனப் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு மருத்துவ சேவை செய்வதே என் லட்சியம்' என்றார்.

ஸ்ரீதேவி

இதையும் படிங்க...'டாக்டராவதுதான் என் லட்சியம்' - நெகிழ வைக்கும் 'ஏ பிளஸ் கிரேடு' பெற்ற பழங்குடியின மாணவி!

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details