தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 26, 2021, 12:57 PM IST

Updated : Jun 29, 2022, 9:35 AM IST

ETV Bharat / state

முஷ்டி முறுக்கும் நாம் தமிழர்... சட்டப்பேரவைக்குள் நுழையுமா?

திமுகவை சித்தாந்த ரீதியாகவும், காங்கிரஸை இன ரீதியாகவும், பாஜகவை கொள்கை ரீதியாகவும் எதிர்க்கும் நாம் தமிழர் அதிமுகவை பெரிதாக எதிர்ப்பதில்லை என்ற விமர்சனம் அடிக்கடி எழுகிறது.

ச்ட்ஃப
cஃப்

தமிழ்தேசிய முழக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட நாம் தமிழர் கட்சியாக சீமானின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததும் தமிழ்நாடு முழுவதும் தொண்டர்களை கொண்டுள்ளது. மே 18, 2009ஆம் அண்டு மதுரையில் அக்கட்சியின் முதல் மாநாடு நடத்தப்பட்டது.

ஈழப் படுகொலைக்கு நீதி பெற்று தர வேண்டும், அதற்கான துணையான திராவிட கட்சிகளை வேரறுக்க வேண்டுமென்று மேடையில் முழங்கிய சீமானை அன்றிலிருந்து தன் அண்ணனாகவும், தங்கள் வழிகாட்டியாகவும் பார்க்கிற இளைஞர் கூட்டம் அவர் பின்னால் திரண்டு நிற்கிறது.

பிரபாகரனுடன் எடுத்த படத்தை வைத்துக்கொண்டு தன் மீதான ஒரு கவர்ச்சி பிம்பத்தை அவர் ஏற்படுத்தியதால் அவருக்கு கூடியிருக்கும் கூட்டம் இது என ஒரு தரப்பினர் கூறுகின்றனர். ஆனால், அவர் கவர்ச்சி பிம்பம் காட்டவில்லை தற்போதைய தலைமுறையிடம் பிரபாகரனை கொண்டு சேர்த்ததுதான் அவருக்கான கூட்டத்தை கூட்டியது என்ற பேச்சும் அடிபடுகிறது.

அதேசமயம், இளைஞர்களின் வாக்குகளை கவரும் கட்சி பிற்காலத்தில் வளர்ந்து நிற்கும் என்பதற்கான சாட்சியாக இருக்கின்றன திராவிட கட்சிகள். அதேபோல் தற்போதைய இளைஞர்களை நாம் தமிழர் கட்சி கவர்ந்திருக்கிறது என்கின்றனர் சீமானின் தம்பிகள்.

இரண்டு பெரிய கட்சிகளோடு கூட்டணி வைக்க மாட்டேன் என கடந்த தேர்தல்களில் தனித்து நின்றது மட்டுமின்றி இந்தத் தேர்தலிலும் அதைத் தொடர்வது அவர் மீது அவரது தம்பிகளுக்கு நம்பிக்கையை கொடுத்திருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

அதேசமயம், இளைஞர்களுக்கு அவர் அளவுக்கு மீறி உணர்ச்சிகளை தூண்டுகிறார், அவர்கள் மத்தியில் ஒரு உணர்ச்சி பிழம்பாகவே வலம் வருகிறார் என்ற விமர்சனத்தையும் அவர்கள் வைக்கிறார்கள்.

முக்கியமாக, தடை செய்யப்பட்ட இயக்கத்தின் தலைவர் புகைப்படத்தை தொடர்ந்து பொதுவெளிகளில் பயன்படுத்தும் சீமான் மீது ஏன் எந்த வழக்குமே பாய்வதில்லை. அவர், மாநிலத்தில் ஆளும் கட்சியுடனும், மத்தியில் ஆளும் கட்சியுடனும் மறைமுகமாக கூட்டு வைத்திருக்கிறார் என்று நாம் தமிழரின் எதிர் முகாமைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள்.

அந்த கட்சி 2011ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணித்தது. ஆனால், அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸை எதிர்த்து பரப்புரையும் மேற்கொண்டது. அதோடு மட்டுமின்றி, “இலை மலர்ந்தால் ஈழம் மலரும்” என்றும் சீமான் பேசினார்.

இலை மலர்ந்தால் ஈழம் மலரும்

அதன் பின் நடந்த 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் முறையாக நாம் தமிழர் களம் கண்டது. அந்தத் தேர்தலில் 1.1% வாக்குகளை பெற்றது.

அதேபோல், 2019 மக்களவைத் தேர்தலில் 4 விழுக்காடு, உள்ளாட்சித் தேர்தலில் தோராயமாக 10 விழுக்காடு வாக்குகளை பெற்ற அக்கட்சி தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து களம் காண்கிறது.

திமுகவை சித்தாந்த ரீதியாகவும், காங்கிரஸை இன ரீதியாகவும், பாஜகவை அரசியல் ரீதியாகவும் எதிர்க்கும் நாம் தமிழர் அதிமுகவை பெரிதாக எதிர்ப்பதில்லை என்ற விமர்சனம் அடிக்கடி எழுகிறது.

ஆனால், அதிமுக பெயரளவில்தான் திராவிட கொள்கைகளை வைத்திருக்கிறது திமுகதான் எங்கள் எதிரி என்கின்றனர் நாம் தமிழர். உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு சிறை சென்று வந்த சசிகலாவை சீமான் சென்று சந்தித்ததிலிருந்தே அவர் யாருக்கு எதிரான அரசியலை முன்னெடுக்கிறார் என்பதை புரிந்துகொள்ளலாம் என்று திமுகவினர் சொல்கின்றனர்.

அதுமட்டுமின்றி, தொடர்ந்து சர்ச்சைகளை தன்னை சுற்றியே வைத்திருக்கும் சீமான், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் ஆமைக் கறியோடு தனக்கு விருந்து படைத்தார் என்று பேசியது அனைவரது மத்தியிலும் விவாதத்தை உருவாக்கியது.

சீமானின் பேச்சில் இனவாதம் அதிகம் இருக்கிறது அவரது பேச்சில்கூட மொழி சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

இந்தத் தேர்தலில், சிறுபான்மையினருக்கும், மொழி வழி சிறுபான்மையினருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியது, 50 சதவீதம் பெண்களுக்கு வாய்ப்பு வழங்கியிருப்பதன் மூலம் அந்தக் குற்றச்சாட்டை சீமான் மட்டுப்படுத்தியிருக்கிறார் என்கின்றனர்.

பெண்களுக்கு சரிபாதி வாய்ப்பை வழங்கிவிட்டு நாம் தமிழர் வேட்பாளர் பேராவூரணி திலீபன் திமுகவின் நாப்கின் வழங்கும் திட்டத்தை தரக்குறைவாக பேசியது முரணாக இருக்கிறது.

அதேபோல், தேர்தல் தேதி அறிவிக்க சில நாள்கள் இருக்கும்போது, “நான் எங்கே போட்டியிட வேண்டுமென்பதை மு.க. ஸ்டாலின்தான் முடிவெடுக்க வேண்டும். அவரை எதிர்த்து கொளத்தூரில் போட்டியிடுவேன்” என்று அறிவித்திருந்தார். ஆனால், தற்போது அவர் திருவொற்றியூரில் போட்டியிட இருக்கிறார்.

எதற்காக தொகுதி மாற்றம் என்று அவரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து போராட வேண்டியிருப்பதால்தான் திருவொற்றியூரில் போட்டியிடுகிறேன்” என்று தெரிவித்தார். ஆனால், அதானி துறைமுக விரிவாக்கத்திற்கும் திருவொற்றியூருக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று கேள்வி பலரால் எழுப்பப்படுகிறது. இப்படி அக்கட்சியின் மீதும், சீமானின் மீதும் பல விஷயங்களில் விமர்சனம் வைக்கப்பட்டாலும் நாம் தமிழர் தனித்து நின்று கட்சியை வளர்ப்பதில் மட்டுமே முழு கவனமாய் இருக்கிறது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய அறந்தாங்கி மாவட்ட நகர துணைத் தலைவர் வினோத், 50 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகள் அடித்த கொள்ளை தெரியும். தமிழரின் எழுச்சிக்காக போராடும் ஒரே கட்சி நாம் தமிழர் மட்டும்தான். நரிகளை வேட்டையாட வந்திருக்கும் புலிகள் நாங்கள். இது திராவிடத்திற்கும் தமிழ் தேசியத்திற்கும் நடக்கின்ற போர்” என்றார்.

வினோத்

மேலும் நாம் தமிழர் கட்சியின் செய்தித் தொடர்பாளர் இடும்பாவனம் கார்த்திக், "நாம் தமிழர் கட்சி ஆரம்பிக்கப்பட்டதே திராவிட கட்சிகளை எதிர்த்துதான். ஒரு காலத்திலும் கூட்டணி அமைக்கமாட்டோம். தனித்து களம் கண்டு ஒரு நாள் நிச்சயமாக நாம் தமிழர் ஆட்சி அமையும்” என்கிறார்.

இடும்பாவனம் கார்த்திக்

இதுவரை நடந்த தேர்தல்களில் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் இதுவரை தனக்கான வாக்கு வங்கியை அதிகரித்து வந்திருக்கிறது. இனி வரும் காலங்களிலும் தனித்து களம் கண்டே தனக்கான வாக்கு வங்கியை அக்கட்சி அதிகரிக்குமா.

அரசியலில் சூழல் மாறலாம், காட்சிகள் மாறலாம். அதனால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதைத்தான் வரலாறு இதுவரை சொல்லியிருக்கிறது.

நாங்கள் உண்மையான கொள்கைவாதிகள் கொள்கையில் தேயமாட்டோம் என்று தற்போது முஷ்டி முறுக்கிக்கொண்டிருக்கும் நாம் தமிழர் கடைசிவரை எந்த சூழலிலும் தனது முஷ்டியை இறக்காமல் இருக்குமா. அனைத்தும் காலங்களின் கையில்.

இதையும் படிங்க:'யாரை முன்னிலைப்படுத்துகிறீர்கள் உங்களையா? பிரபாகரனையா?' - சீமானுக்கு ஒரு கடிதம்

Last Updated : Jun 29, 2022, 9:35 AM IST

ABOUT THE AUTHOR

...view details