மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மருத்துவக் கல்வி கட்டணத்தை குறைக்குமாறு வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "அண்மையில் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத், சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த பொது நல வழக்கின் மூலம், அரசு மருத்துவக் கல்லூரிகளில் பிற தனியார் மருத்துவக் கல்லூரிகளை விடச் கூடுதலாக வாங்கிய கட்டணம் திருப்பி அளிக்கப்பட்டது. தொடர்ந்து, இந்த ஆண்டு கல்விக் கட்டணம் ரூ. 4 லட்சம் என மாணவர் சேர்க்கைக் குறிப்பு ஏட்டில் அரசு வெளியிட்டது. ஆனால், அதை ரூ 5.44 லட்சமாக உயர்த்தி, கடந்த 12ஆம் தேதி மீண்டும் அறிவித்தது. இது கண்டனத்துக்குரியது.
தற்போது கடலூர் அரசு மருத்துவக் கல்லூரியாக செயல்பட்டுவரும் இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் கல்வி கட்டணமாக ரூ. 5.44 லட்சம் நிர்ணயித்துள்ளனர். அதேபோல், ஈரோடு அரசு மருத்துவ கல்லூரியிலும் கல்விக் கட்டணமாக ரூ 3.85 லட்சம் என அறிவித்து இருக்கின்றார்கள். இக்கட்டணத்தைச் செலுத்த முடியாமல் பெற்றோர்கள் சிரமப்படுகின்றனர். அரசே ஏற்று நடத்தும் இந்த இரண்டு மருத்துவ கல்லூரிகளிலும் மற்ற அரசு கல்லூரிகளில் வசூலிப்பது போன்று ரூ. 13,670 மட்டுமே வசூலிக்க வேண்டும்.
மேலும், கடலூர் அரசு பல் மருத்துவக் கல்லூரிக்கு (பழைய பெயர் இராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரி), அரசு பல் மருத்துவக் கல்லூரியின் கட்டணமான ரூ. 11,610 மட்டுமே வாங்க வேண்டும்.