தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 9, 2021, 5:57 PM IST

ETV Bharat / state

11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை நுழைவுத்தேர்வை திரும்ப பெற வலியுறுத்தல் - பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு

சென்னை: பதினொன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கையில் நுழைவுத் தேர்வு வைப்பதை திரும்ப பெற வலியுறுத்தியும், ஜூன் 14ஆம் தேதி முதல் ஆசிரியர்களை பள்ளிக்கு அழைப்பதையும் தவிர்க்க வேண்டும் என பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

exam
exam

தமிழ்நாட்டில் ஜூன் மூன்றாவது வாரம் முதல் பதினொன்றாம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கான வகுப்புகள் தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதல் அடிப்படையில் தொடங்கும் என பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், 11ஆம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கையில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் குறிப்பிட்ட பாடப்பிரிவிற்கு சேர்க்கைக்கான இடங்களைவிட மிக அதிகமான விண்ணப்பங்கள் வரப்பெற்றால், அந்தப் பாடப்பிரிவிற்கு விண்ணப்பித்தவர்களுக்கு தொடர்புடைய கீழ்நிலைப் பாடத்திலிருந்து 50 வினாக்கள் தயார்செய்து தேர்வு நடத்தி அதில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநிலப் பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் கூறியதாவது, தமிழ்நாடு முதலமைச்சர் 12ஆம் வகுப்பு மாணவர்களின் உயிர், உடல் நலத்தினை கருதி தேர்வை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். இதனால் நுழைவுத் தேர்வு இல்லாமல் உயர்கல்வியில் மாணவர்கள் சேர்வதற்கான உத்தரவாதத்தை அரசு வழங்கி உள்ளது.

இந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை ஆணையர் வெளியிட்டுள்ள உத்தரவு அரசின் கொள்கை முடிவுக்கு எதிராக இருப்பதாக கருதுகிறோம். மாணவர்களின் நலன் காக்கும் அரசாக தமிழ்நாடு அரசு எல்லா நேரங்களிலும் செயல்பட்டு வருகிறது.

தனியார் பள்ளிகள் தொடர்ந்து வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், 11ஆம் வகுப்பில் மாணவர்களுக்கு தேர்வு வைத்து சேர்க்கை நடத்திக் கொள்ளலாம் என்பது மாணவர்களை பெரிதும் பாதிக்கக்கூடியது. கரோனா தொற்றுக்காலத்தில் மாணவர்கள் மிகுந்தப் போராட்டத்திற்கு இடையே தேர்வினை எழுதி உள்ளனர். அவர்களுக்கான மதிப்பெண்களை எப்படி வழங்குவது என்பதை அரசே முடிவு செய்யவில்லை.

11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை நுழைவுத்தேர்வை திரும்ப பெற வலியுறுத்தல்

பள்ளிகள் தொடங்குவதற்கு இன்னும் காலம் இருக்கிறது. எனவே அரசு இதனை கொள்கை முடிவாக எடுத்து நுழைவுத் தேர்வின்றி , மாணவர்கள் படித்த பள்ளியில், சேர்க்கை வழங்க வேண்டும். தேவைப்பட்டால் கூடுதல் வகுப்புகளை தொடங்க வேண்டும். தேர்வுகள் நடத்தப்பட்டால் அது கட்டணக்கொள்ளைக்கு வழி வகுக்கும் என்பதை அரசு உணர்ந்துக் கொள்ள வேண்டும். பள்ளிக்கல்வித்துறை ஆணையர் தனது உத்தரவை திரும்பப் பெற வேண்டும். தமிழ்நாட்டில் அரசு எடுத்துள்ள பல்வேறு நடவடிக்கைகளால் கரோனா தொற்று குறைந்து வருகிறது"

"இந்த நேரத்தில் ஜூன்14ஆம் தேதி முதல் மாணவர்கள் சேர்க்கை, பாடப்புத்தகங்கள் வழங்குவதற்காக ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என கூறியுள்ளனர். கரோனா தொற்று முழுமையாக கட்டுப்படுத்தப்படவில்லை. பொதுப்போக்குவரத்து விடப்படவில்லை. அனைவருக்கும் முழுமையான தடுப்பூசி வழங்கப்படவில்லை. எனவே இந்த நேரத்தில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதால், மீண்டும் ஒரு தொற்று பரவுவதற்கு வாய்ப்பாக அமைந்துவிடும். எனவே பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவுகளை ஆணையர் திரும்பப்பெற வேண்டும்" என தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details