தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 22, 2023, 10:56 PM IST

ETV Bharat / state

சேலத்தில் அமையவுள்ள ஜவுளிப் பூங்காவிற்கு ஒன்றிய அரசு நிதி வழங்க வேண்டும்: முதலமைச்சர் கோரிக்கை

சேலத்தில் அமையவுள்ள ஜவுளிப் பூங்காவிற்கு ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா திட்டம் (SITP) மற்றும் ஒருங்கிணைந்த செயலாக்க மேம்பாட்டுத் திட்டத்திலிருந்து (IPDS) ஒன்றிய அரசின் நிதியை வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகம் மற்றும் ஐவுளித்துறை அமைச்சர் பியுஷ் கோயல் ஆகியோர் முன்னிலையில் இன்று (22.3.2023) இந்தியாவில் முதலாவதாக பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப் பூங்கா (PM MITRA) விருதுநகர் மாவட்டம், இ.குமாரலிங்கபுரத்தில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தமிழ்நாடு அரசிற்கும் ஒன்றிய அரசிற்கும் இடையே மேற்கொள்ளப்பட்டன.

இந்திய பிரதமரால் 17.3.2023 அன்று ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப் பூங்கா (PM MITRA) திட்டத்தின் கீழ் ஜவுளிப் பூங்காக்கள் அமையவுள்ள 7 மாநிலங்களில் முதலாவதாக தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம், இ. குமாரலிங்கபுரம் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களின் தொழில் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்படும் சூழலில் விருதுநகர் மாவட்டத்திலுள்ள இ.குமாரலிங்கபுரத்தில் அமையும் சிப்காட் தொழிற்பூங்காவினை, இம்மாவட்டம் பெற்று இருக்கும் நூற்பாலைகள், சிறு தொழில்கள் வளர்ச்சி போன்ற கூடுதல் அம்சங்களின் அடிப்படையில் மிகவும் பொருத்தமாக இருக்கும் என தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசிற்குப் பரிந்துரை செய்தது.

தொழில் துறையைப் பொறுத்தவரை இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவிலான கவனத்தை தமிழ்நாடு ஈர்த்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம், பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், அதிகளவில் வேலைவாய்ப்பு அளிப்பதும், அதிலும் பெண்களுக்கு பெருமளவில் வேலைவாய்ப்பு அளிப்பதால் இந்தியாவிலேயே தமிழ்நாடு தொழில் துறையில் முக்கியத்துவம் பெற்று வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப் பூங்காவானது மொத்தம் 2,000 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் சிப்காட் மூலம் உருவாக்கப்படும்.

இப்பூங்காவில், அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் மட்டுமின்றி, உடனடியாக தொழில் தொடங்க ஆயத்த தொழிற்கூடங்கள் (Plug & Play Factory Buildings), தொழில் பணியாளர்களுக்கான வீடுகள் (Industrial Housing), காற்றாலை மற்றும் சூரிய தகடு மின் உற்பத்தியை உள்ளடக்கிய பசுமை ஆற்றல் (Green Energy including Windmill and Solar Based Power Generation), உள்ளிட்ட சிறப்பு வாய்ந்த உட்கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்படவுள்ளது. இப்பூங்கா முழு அளவில் செயல்படும் போது சுமார் 2,00,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப் பெறும்.

இப்பூங்காவில் தொழில் தொடங்குவதற்கு 7 பெரும் தொழில் நிறுவனங்களுடன் தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனமும், 4 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுடன் துணிநூல் துறையும், என மொத்தம்
11 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று மேற்கொள்ளப்பட்டன.

இதன் மூலம் 1,231 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்படுவதுடன் 6,315 நபர்களுக்கு வேலைவாய்ப்பும் உருவாக்கப்படுகிறது. இதன்மூலம் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், ''தொழில் துறையைப் பொறுத்தவரையில், இந்திய அளவில் மட்டுமல்லாமல், உலக அளவிலான கவனத்தைத் தமிழ்நாடு ஈர்த்துள்ளது. அந்தத் தொழில் துறையில் ஜவுளி வர்த்தகமும் முக்கியமானதாகும். நம் நாட்டின் கைத்தறித்துணி வர்த்தகத்தில், தமிழ்நாடு மூன்றில் ஒரு பங்கு வகிக்கிறது. பெருமளவு பருத்தி நூல் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி செய்யும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

தமிழ்நாடு ‘இந்திய நாட்டின் நூல் களஞ்சியம்’ என அழைக்கப்படுவதோடு, நூற்பு, கைத்தறி நெசவு, விசைத்தறி நெசவு, ஆயத்த ஆடை மற்றும் ஆடைத் தயாரிப்பில் முதன்மையான மாநிலமாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது.
தொழிற்சாலைகளுக்குத் தேவையான நிலம், சிறப்பான தொழில் கொள்கை, கல்வி மற்றும் ஆராய்ச்சி, முதலீட்டுக்கான உகந்த சூழல், உறுதியான உட்கட்டமைப்பு போன்ற அம்சங்களை தமிழ்நாடு கொண்டுள்ளதால், ஜவுளி மற்றும் ஆடைத் தயாரிப்பில் பெருமளவு முதலீட்டை ஈர்க்கும் வாய்ப்பினை இயற்கையாகவே பெற்றுள்ளது.

சிப்காட் நிறுவனம் தமிழ்நாட்டில் பெரிய மற்றும் நடுத்தரத் தொழில்கள் உடனடியாக தொடங்கிட ஏதுவாக தொழில் வாய்ப்புள்ள பகுதிகளில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய தொழிற் பூங்காக்களை ஏற்படுத்தி, பராமரித்து வருகிறது.

இந்நிறுவனம், இதுநாள் வரை, 6 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உட்பட 28 தொழிற் பூங்காக்களை, மொத்தம் 38 ஆயிரத்து 522 ஏக்கரில் ஏற்படுத்தியுள்ளது. இத்தொழிற் பூங்காக்களில் தற்போது 2 ஆயிரத்து 890 நிறுவனங்கள், 3 இலட்சத்து 94 ஆயிரத்து 785 பணியாளர்களுடன் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. மேலும், தொழில் முனைவோரின் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் விதமாக சிப்காட் ஓசூர் மற்றும் திருபெரும்புதூர் தொழில் பூங்காக்களில் ஏற்படுத்தப்பட்ட தொழில் புத்தாக்க மையங்கள் (Innovation Centres) என்னால் 24.6.2022 அன்று துவக்கி வைக்கப்பட்டு, பயன்பாட்டில் இருந்து வருகிறது.

தொழில் வளர்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, குறிப்பாக, தென் மாவட்டங்களின் தொழில் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்து எங்களுடைய தமிழ்நாடு அரசு செயலாற்றி வருகிறது. கடந்த ஆண்டு சிப்காட் தூத்துக்குடியில் 1,152 ஏக்கர் பரப்பளவில் 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மரக்கலன் பூங்கா (Furniture Park) என்னால் அடிக்கல் நாட்டப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம், எறையூரில் 244 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு தொழிற்பூங்கா ஒன்றினை கடந்த 20.11.2022 அன்று துவக்கி வைத்திருக்கிறேன். திருச்சி மாவட்டம், மணப்பாறையில் 1077 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு தொழிற்பூங்கா இந்த அரசால் கடந்த 29.12.2022 அன்று துவக்கிவைக்கப்பட்டுள்ளது.

இதற்கெல்லாம் மகுடம் வைப்பதைப் போல, விருதுநகர் மாவட்டத்தில் சிப்காட் நிறுவனத்தின் மூலம் அமையப்பெறவுள்ள, பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப் பூங்கா (பி.எம். மித்ரா பூங்கா) திகழப் போகிறது.

ஒன்றிய அரசு இந்தப் பூங்காவிற்கு அனுமதி அளித்துள்ள 500 கோடி ரூபாய் மானியத்துடன், மொத்தம் 2 ஆயிரம் கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட இருக்கின்றன.
இந்தப் பூங்கா முழு அளவில் செயல்படும் போது, சுமார் 2 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப் பெறுவதோடு, தென்மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் ஊக்கமளிப்பதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

தமிழ்நாட்டில் கிடைக்கப்பெறும் அனைத்துத் தொழில் வாய்ப்புகளையும், தொழில் நிறுவனங்களும், தொழில் முனைவோர்களும் பயன்படுத்திக் கொண்டு, நாம் நிர்ணயித்துள்ள இலக்கான, 2030-2031ஆம் ஆண்டுக்குள், தமிழ்நாட்டில் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சியினை எய்திட அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

சேலத்தில் அமையவுள்ள ஜவுளிப் பூங்காவிற்கு ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா திட்டம் (SITP) மற்றும் ஒருங்கிணைந்த செயலாக்க மேம்பாட்டுத் திட்டத்திலிருந்து (IPDS) ஒன்றிய அரசின் நிதியை வழங்க வேண்டும் என்று இந்த நேரத்தில் நான் ஒரு கோரிக்கையை வைக்க விரும்புகிறேன்.

இத்திட்டத்திற்காக மாநில அரசின் சார்பில் ஏற்கனவே 119 ஏக்கர் நிலத்தினை ஒதுக்கீடு செய்துள்ளதோடு, திட்ட செலவிலும் 25 விழுக்காட்டை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம். எனவே, பிரதமர் அவர்களும், ஜவுளித்துறை அமைச்சர் அவர்களும் எங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றி, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உதவிட வேண்டுமென்று உரிமையோடு நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.

இந்திய அளவில் மட்டுமல்லாமல், தெற்காசியாவிலேயே, தொழில் வளர்ச்சியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிட, நாம் அனைவரும் இணைந்து, அந்த இலட்சிய இலக்கினை அடைவதற்கு பாடுபட வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: காஞ்சிபுரம் பட்டாசு ஆலை விபத்து; அமைச்சர் ஆய்வு - முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details