சென்னை டிபி சத்திரம் காவலர் குடியிருப்பில் வசிப்பவர் அம்பிகா. இவர் பெரவல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வருகின்றார். இவர் நேற்று இரவு பணிமுடிந்து அம்மா ரோந்து வாகனத்தை ஓட்டி வந்துள்ளார். இவருடன் ஆயுதப்படை காவலர் வேலன்(ஓட்டுநர் ) உடன் சென்றார்.
கீழ்ப்பாக்கம் கார்டன் அருகே வரும்போது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அங்கு நிறுத்தி வைத்திருந்த ஆட்டோ மீது மோதி, பின்னர் சாலையில் அமர்ந்திருந்த ஆட்டோ ஓட்டுனர் மீது இடித்தது. அத்துடன் அருகில் இருந்த ஆந்திர வங்கியின் முன்பக்க இரும்பு கேட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த இருசக்கர வாகனங்கள் மீது மோதி நின்றது.
இதில் காயமடைந்த ஆட்டோ ஓட்டுநர் மகாலிங்கத்தை பொதுமக்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் ஆய்வாளருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. மேலும் ரோந்து வாகனத்திலிருந்து இறங்கிய ஆயுதப்படை காவலர் வேலனை குடிபோதையில் இருந்த டி.பி. சத்திரம் காவலர் குடியிருப்பில் வசிக்கும் தலைமை காவலர் ஜான் பிரிட்டோ மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரும் சரமாரியாக தாக்கினர். இதில் காயமடைந்த வேலன் கே.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அம்மா ரோந்து வாகனம் மோதி இருவர் காயம் இந்த சம்பவத்தை கண்டித்தும், விபத்து ஏற்படுத்த காவல் துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த போக்குவரத்து காவலர்கள் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.