சென்னை:சிம்சன் பகுதியைச் சேர்ந்தவர் பசுமலை (55). இவர் டெய்லர் வேலை செய்துவருகிறார். இந்த நிலையில் நேற்றிரவு (பிப்ரவரி 13) பசுமலை, சிம்சன் பேருந்து நிலையத்திற்குச் சென்றுள்ளார்.
அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் பசுமலையிடம் முகவரி கேட்பதுபோல் நடித்து சட்டைப் பாக்கெட்டில் வைத்திருந்த விலை உயர்ந்த செல்போனை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
அதிர்ச்சியடைந்த பசுமலை இது குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் அடிப்படையில் சிந்தாதிரிப்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து செல்போன் எண்ணை வைத்து கண்டுபிடிக்க முயன்றனர்.
செல்போனைப் பறித்துச் சென்ற நபர்கள் சிந்தாதிரிப்பேட்டை மீன் சந்தையில் இருப்பது தெரியவந்தது. அங்கு விரைந்துசென்ற காவல் துறையினர் செல்போன் பறித்துச் சென்ற இருவரையும் கைதுசெய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர்கள் வடபழனி பகுதியைச் சேர்ந்த ஜான்சன் (20), சதீஷ்குமார் (21) எனத் தெரியவந்தது. மேலும் இவர்கள் தனியாக நடந்துசெல்லும் நபர்களை குறிவைத்து முகவரி கேட்பதுபோல் நடித்து செல்போன், செயின் பறிப்பில் தொடர்ந்து ஈடுபட்டுவந்தது தெரியவந்தது.
பின்னர் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு! - அண்ணாமலை குற்றச்சாட்டு