தமிழ்நாட்டில் கரோனா தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த வரும் மே 10ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில் காய்கறி கடைகள், மளிகை கடைகளுக்கு செல்வது போன்ற அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கை முன்னிட்டு வெளியூர்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
சென்னை: முழு ஊரடங்கு அமலுக்கு வருவாதல் பயணிகளின் வருகைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
முழு ஊரடங்கு காரணமாக அரசு அலுவலகங்கள், மற்ற தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. அலுவலகங்கள் மூடப்படுவதால், ஏராளமான மக்கள் ஊரடங்கு காலத்துக்கு முன்பாக சொந்த ஊர்களுக்குச் செல்ல நேரிடும் என்பதால் இன்று 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
பயணிகளின் வருகைக்கு ஏற்ப அதிக பேருந்துகள் இயக்கப்படும் எனவும், தமிழ்நாட்டிலிருந்து வெளி மாநிலங்களுக்குப் பேருந்துகள் இயக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.