தமிழ்நாடு

tamil nadu

தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கு? தலைமைச் செயலாளர் அவசர ஆலோசனை

By

Published : Mar 16, 2021, 1:01 PM IST

Updated : Mar 16, 2021, 1:07 PM IST

சென்னை: தமிழ்நாடு தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், கரோனா தடுப்பு நடவடிக்கை செயல்பாடுகள் குறித்து, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கு? தலைமைச் செயலாளர் அவசர ஆலோசனை!
தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கு? தலைமைச் செயலாளர் அவசர ஆலோசனை!

தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி மாதம் 8ஆம் தேதி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 800க்கும் கீழ் குறையத் தொடங்கியது. தொடர்ந்து குறைந்து வந்த தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை, கடந்த சில நாள்களுக்கு முன்னர் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, செங்கல்பட்டு, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது கரோனாவின் தாக்கம் அதிகரித்துவருகிறது.

இந்நிலையில், 66 நாள்களுக்குப் பின்னர் நேற்று (மார்ச். 15) தமிழ்நாட்டில் மீண்டும் 800க்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 50 நாள்களுக்கு பின்னர் கரோனா சிகிச்சை பெறுகிறவர்களின் எண்ணிக்கை ஐந்தாயிரத்தை கடந்துள்ளது. தமிழ்நாட்டில் நேற்று (மார்ச் 15) ஒரே நாளில் 64 ஆயிரத்து 645 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 476 ஆண்கள், 360 பெண்கள் என மொத்தம் 836 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அதிகபட்சமாக சென்னையில் 317 பேரும், செங்கல்பட்டில் 81 பேரும், கோவையில் 70 பேரும், குறைந்தபட்சமாக அரியலூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, தென்காசி, ராமநாதபுரத்தில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (மார்ச் 15) அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் 12 வயதுக்குள்பட்ட 38 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 165 முதியவர்களுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், மாநிலத்தில் மேற்கொள்ள வேண்டிய கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் கலந்தாலோசித்து வருகிறார்.

தேர்தல் காலம் என்பதால் பொதுக்கூட்டங்கள் தேர்தல் பரப்புரை உள்ளிட்டவற்றில் கட்டாய முகக்கவசம் அணிய வேண்டும், பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் பொது மக்கள், சமூக விலகலை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் எனவும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் எனவும், சுபநிகழ்ச்சிகள் மற்றும் துக்க நிகழ்ச்சிகளில் குறிப்பிட்ட நபர்களை மட்டும் அனுமதிப்பது குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது.

மேலும் இது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த ஆலோசனை வழங்கப் படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இக்கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை அலுவலர்கள், இதர அரசு அலுவலர்கள் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். இக்கூட்டத்தின் முடிவில் ஊரடங்கு குறித்து முடிவு வெளியிட வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க...முதலமைச்சரின் ஷாக் நியூஸ் முதல் துரைமுருகனின் கலாய்வரை: இன்றைய தேர்தல் சரவெடிகள்

Last Updated : Mar 16, 2021, 1:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details