சென்னை பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூர் குளக்கரை தெருவைச் சேர்ந்தவர் சரஸ்வதி. 65 வயது நிரம்பிய இவர், அதே பகுதியில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் 10 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து தனது பர்ஸில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். இதனைப் பார்த்த மூன்று பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல், அவரிடமிருந்து பணத்தைப் பறித்துச் சென்றது.
இதைக் கண்ட அப்பகுதி மக்கள் மூதாட்டியை மீட்டு சங்கர் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த சங்கர் நகர் காவல் துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கைப்பற்றி, பணத்தை திருடிச் சென்ற கும்பலைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.