சென்னை சென்ட்ரலிலிருந்து கேவாடியாவிற்கு சிறப்பு ரயில் சேவை தொடங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கொடியசைத்து ரயில் சேவையைத் தொடங்கிவைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், "குடும்ப ஆட்சியையும், கிராம முனுசிப் பதவி முறையையும் ஒழித்து கிராம நிர்வாக அலுவலரை நியமித்த பெருமை எம்ஜிஆருக்கே சாரும். அவருடைய பிறந்தநாளன்று, சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இன்று சென்னை சென்ட்ரலில் இருந்து வாரம் ஒருமுறை இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை தொடங்கப்பட்டது.
சசிகலா விடுதலையினால் ஒன்றரை கோடி தொண்டர்களும், சசிகலா மற்றும் அவரை சார்ந்தவர்கள் தலையீடு இன்றி ஆட்சியும் கட்சியும் நடத்தப்படவேண்டும் என எண்ணுகிறோம். இந்த முடிவில் மாற்றம் இல்லை.
இருப்பினும், சசிகலா வருகை குறித்த மாயையை ஏற்படுத்த முனைவர். ஆனால் அவர்களால் தமிழ்நாட்டில் எந்தத் தாக்கமும் ஏற்படாது. 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக மற்றும் அவர்களின் கூட்டணி பெரும் வெற்றி பெற்று மீண்டும் தமிழ்நாட்டில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சியை அளிக்கும்.
சசிகலா குறித்த துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியின் கருத்துகளை அதிமுகவினர் பொருட்படுத்தவில்லை. அவருக்கு அதிமுக சார்பில் சரியான பதில் தரப்பட்டுள்ளது. சசிகலா விடுதலை ஆன பின்பு அதிமுக நிர்வாகிகள் அவரை சந்திக்க எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. உண்மையான தொண்டர்கள் அதிமுகவை விட்டு எங்கும் வெளியேறமாட்டர்கள்" என நம்பிக்கைத் தெரிவித்தார்.