தமிழ்நாடு மாநில பாஜக தலைவராக இருந்த தமிழிசை செளந்தரராஜன், செப்டம்பர் 8ஆம் தேதி தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்ட பின்பு, அவ்வப்போது தமிழ்நாட்டில் நடைபெறும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழிசை கலந்துகொண்டு வருகிறார்.
அந்தவகையில், தமிழ்நாடு மருத்துவர்கள் சங்கக் கூட்டமைப்பின் பாராட்டு விழா சென்னை தியாகராய நகரில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனை மருத்துவர்கள் பாராட்டி வாழ்த்தினர்.
இந்நிகழ்வில் தமிழிசை பேசுகையில், "நான் சார்ந்த மருத்துவ உலகின் பாராட்டுகள் எனக்கு வார்த்தைகளால் சொல்ல முடியாத மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ்நாடு வருகிறேன் என நினைத்தால் அம்மா வீட்டிற்கு வரும் ஒரு குழந்தை போல் குதூகலமடைகிறேன். கமலாலயம் உள்ளே செல்லும் போது மருத்துவர் என்ற கிரீடத்தை தலையிலிருந்து இறக்கி வைத்து சாதாரண தொண்டனாகத்தான் செல்வேன். அதற்கு தான் எனக்கு தற்போது கீரிடம் வைத்துள்ளனர். உழைப்பிற்கு அங்கீகாரம் கொடுத்துள்ளனர்.
ராஜ்பவனை மக்கள் வரும் இடமாக மாற்றியுள்ளேன். மக்கள் இல்லாமல் நாம் இல்லை. உயர வேண்டும் என்றால் உழைப்பு தான். அது தவிர வேறு ஏதுமில்லை. கல்லூரி மாணவர்கள் யாரும் தங்கள் வாழ்க்கையை முடித்துகொள்ள வேண்டும் என நினைக்காதீர்கள். நான் தெலங்கானாவில் இருந்தாலும் தமிழ் நாட்டு செய்திகளை பார்த்து கொண்டு வருகிறேன். மணப்பாறை சிறுவன், ஐஐடி சம்பவங்கள் மிகுந்த வேதனையளிக்கிறது.
தடைகள் வந்தாலும் வாழ்ந்து காட்டவேண்டும். தெலுங்கு மக்களுக்கு சேவை செய்வதோடு தெலுங்குக்கும், தமிழுக்கும் ஒரு பாலமாக இருப்பதை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன்" என்று தெரிவித்தார்.